search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoking scene"

    தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க அறிவுறுத்துங்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். #Nasar #Ramadoss
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படங்கள் மிகவும் வலிமை வாய்ந்த மக்கள் ஊடகங்கள். அவற்றின் மூலம் சமூகப் புரட்சியையும் ஏற்படுத்தலாம். சமூகச் சீரழிவையும் ஏற்படுத்தலாம்.

    அண்மைக்காலமாக திரைப்பட நடிகர்கள், குறிப்பாக கதாநாயகர்கள் தங்களின் பிரபலத்தை சமூகச் சீரழிவுக்காக பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சில நடிகர்களின் திட்டமிட்ட செயல்பாடுகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

    உதாரணமாக, அண்மையில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படமான சர்காரில் தொடக்கம் முதல் இறுதி வரை நடிகர் விஜய் ஏராளமான காட்சிகளில் புகைப்பிடித்திருக்கிறார். சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லை.

    அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப்பிடிக்கிறார். பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.


    திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை; புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை திரையில் ஓடவிட்டால் போதுமானது என்றாலும்கூட, நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைய புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகும்.

    நேரடியாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை. இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள்.

    ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ்பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பின்னாளில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக உயர்ந்த எம்.ஜி.ஆர். எந்தப் படத்திலும் மது குடிப்பது போன்றோ, சிகரெட் புகைப்பது போன்றோ நடிக்கவில்லை.

    எனவே, பொதுநலன் கருதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டுகிறேன். முடிந்தால், இதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாகவே கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தின் நகல்கள் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  #Nasar #Ramadoss
    ×