என் மலர்
நீங்கள் தேடியது "மை"
- அரசியல் கட்சியினர் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஒரு பாட்டிலில் 700 வாக்காளர்களுக்கு இந்த அழியாத மை வைக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் தேர்தல் ஆணையமும் மறுபுறம் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி தேர்தல் அலுவலர்கள் தேர்வு, வாக்கு சாவடிகள் அமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு முக்கியமான அழியாத மை தயாரித்து வழங்க கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்தை தேர்தல் ஆணையம் கேட்டுகொண்டுள்ளது.
மைசூரில் உள்ள எம்பிராய்டரி மற்றும் சாய தொழிற்சாலைக்கு தலா 10 மி.லி. எடை கொண்ட சுமார் 26.55 லட்சம் அழியாத மை வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற மை தயாரிக்கும் நிறுவனம் இது தான். ஒரு பாட்டிலில் 700 வாக்காளர்களுக்கு இந்த அழியாத மை வைக்கப்படும்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-
தேர்தலுக்கான அழியாத மை தயாரிப்பு கடந்த டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டது. ஏற்கனவே உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு இந்த அழியாத மை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்ப அழியாத மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அழியாத மை மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்றனர்.






