என் மலர்
நீங்கள் தேடியது "மனைவிக்கு வளைகாப்பு"
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சைனா (வயது 26). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் கண்ணடி குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அர்ச்சனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் நேற்று அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த சைனா தனது நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார்.
பின்னர் நேற்றிரவு 8 மணியளவில் கண்ணடி குப்பம்- நாச்சார்குப்பம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் பேசியபடி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது விண்ணமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஓட்டி வந்த ஆட்டோ சைனா மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சைனா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய மனைவியின் வளைகாப்பு அன்றே புது மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் சென்னை பீர்க்கங்கரணை காட்டன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தகோவிந்தன் (45). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வடபுதுப்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாக சென்ற கார் வசந்த கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தகோவிந்தனை மீட்ட ஆம்பூர் தாலுகா போலீசார் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






