என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலைய ஊழியர்கள்"

    கொழும்பில் இருந்து கோவைக்கு பயணிகள் மூலம் 1½ கிலோ தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreAirport
    கோவை:

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று கோவைக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகீர் என்ற பயணி தனது கைப்பையில் 16 கட்டிகளாக 1.6 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்து விமான நிலைய ஊழியர்களான மனோஜ், சதிஷ் ஆகியோரிடம் தங்கம் இருந்த பையை கொடுத்தார். அப்போது அங்கு இருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 55 லட்சம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்படி தங்கத்தை பெற விமான நிலையத்தின் முன்புறம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் காத்து இருந்த திருச்சியை சேர்ந்த ராஜா என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதனையடுத்தி 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விமான நிலைய ஊழியர்களை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால் அவர்கள் மூலம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இந்த கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் மிஸ்ரா என்பவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #CoimbatoreAirport
    ×