search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siddhar worship"

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி உள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி அடைந்துள்ளார். அடக்கமாகி பல வருடங்கள் கழித்து பூமியில் அவரைத் தோண்டியப் போது, அவரது உடல் எந்த சேதமும் இன்றி அப்படியே இருந்தது அதிசயத்திலும் அதிசயம் என்கிறார்கள். அவரின் வரலாறு.. நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத வரலாறு.

    சங்கரன்கோவில் அருகில் உள்ள அரியூரைச் சேர்ந்தவர் சிவனய்யா. இவர் மிகப்பெரிய அந்தஸ்து கொண்டவர். மாவீரன் பூலித்தேவனுக்கு ராஜகுருவாக இருந்தவர். பூலித்தேவனுக்கு பல நேரங்களில் நல்லத் திட்டங்கள் வகுத்து கொடுத்து, அவரைப் போரில் வெல்ல வைத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் கேட்காமல் பூலித்தேவன் எங்கும் செல்லமாட்டார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.

    அரியூரே மிகப்பெரிய ஆன்மிக கிராமம்தான். அரியூர் மலை மிகவும் பிரசித்திப் பெற்றது. பாம்பாட்டி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு அமர்ந்து தவம் இயற்றியுள்ளார்கள். சிவனய்யா சித்தரும் இங்கு அமர்ந்து தவமேற்றியுள்ளார். சிவனய்யா அனைத்து ஜீவ ராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பாராம். இவர் தனது பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும்போது, கண்ணை மூடி தியானத்தில் ஈடுபடுவார். திடீரென்று ‘நல்லவனே வா' என்றால், எங்கிருந்தாலும் நாகப்பாம்பு அவர் முன் வந்து படமெடுத்து ஆடி நிற்குமாம். அவர் கண்ணைத் திறந்து நாகத்தினைப் பார்த்து ‘நல்லவனே போ' என்று கூறினால் பாம்பு அங்கிருந்து அகன்று விடும் அளவுக்கு தவவலிமை பெற்றவராம்.

    அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சிவனய்யா சித்தருக்கு நல்லபெயர். மக்களுக்கு எந்தத் தீங்கு என்றாலும் தனது தவவலிமையால் அதனைத் தீர்த்து வைப்பார்.

    இவர் பேரும் புகழுடன் வாழ்ந்து வருவதை சகிக்க முடியாத மோகினி பெண்ணொருத்தி, இவர் புகழை அழித்து விட திட்டமிட்டாள். அதனை செயல்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.

    சிவனய்யா சித்தர் நெல்கட்டும் செவலில் இருந்து சங்கரன்கோவிலுக்கு தினமும் நடந்து சென்றே, சிவபெருமானை வணங்கி வருவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் சித்தரை பழிவாங்க பயன் படுத்த நினைத்தாள் மோகினி.

    ஒரு நாள், சித்தர் வரும் வழியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தக் குழந்தையை கிடத்தினாள். குழந்தை மோகினியால் உருவாக்கப்பட்ட தீயச் சக்தி. அதற்கு உயிர் கொடுத்தால், அந்த சக்தி மூலம் இந்த உலகத்தினையே தீயச் செயலில் ஈடுபடுத்தி விடும். அதே நேரம் சித்தர்தான் அந்த சக்தி உருவாக காரணம் என்ற கெட்டப்பெயரையும் உருவாக்கி விடலாம் என்று கணக்கு போட்டாள் மோகினி.

    சித்தர் வந்த வழியில், சாதாரண பெண் போன்ற உருவம் கொண்டு, குழந்தையை காப்பாற்றித் தரும்படி வேண்டினாள் மோகினி. ஆனால் அனைத்தையும் தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட சித்தர், கையில் இருந்தக் கம்பை மோகினி மீது போட்டார். அந்தக் கம்பு ஒளிப்பிளம்பாக மாறி அவளை நோக்கிப் பாய்ந்தது. மோகினி தப்பித்தால் போதும் என அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். இதனால் சித்தரின் புகழ் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவத் தொடங்கியது.

    பாறைப்பட்டி கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதை வழியாக சென்று அரியூர் மலை அடிவாரத்தை அடையலாம். அங்கு தரையோடு தரையாக ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் வட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அந்த வட்ட எழுத்துக்கள் எல்லாம் சிவனய்யா தம் கைப்பட எழுதினது என அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்தப் பகுதியில் நிறைய புதையல் இருப்பதாகவும், அதன் குறிப்பே, சிவனய்யா எழுதி வைத்த வட்ட எழுத்துகள் என்று சில கதைகளும் சொல்லப்படுகிறது.



    சிவனய்யா சித்தர் எப்போது, எப்படி, எந்த ஆண்டு சமாதி அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது சமாதி இடத்தை யாரும் அறியமுடியவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஒருவரது கனவில், சித்தர் சமாதி அடைந்த இடம் தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தோண்டினர். அவரது உடல் தென்பட்டது.

    அனைவருக்கும் ஆச்சரியம். சித்தரின் உடல் கெடாமல் அப் படியே இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அடங்கிய சித்தரின் உடல் கெடாமல் இருப்பதையும், அவரது தவ வலிமையையும் எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மூன்று நாள் அப் படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் 4 அடியில் சுவர் எழுப்பி அதன் மீது தளம் போட்டு மூடினார்கள். சமாதி கோவிலை அமைத்து 44 நாள் பூஜை செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. பவுர்ணமி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவரும் பக்தர்கள், சிவனய்யா சித்தர் சமாதியை 21 தடவை சுற்றி வந்து நல்ல பலன்களைப் பெறுகிறார்கள்.

    சிவனய்யா சித்தர் புதையலைக் காப்பவர் என்பதால், இங்கு வந்து வணங்கினால் கடன் பிரச்சினை தீருகிறது. சித்தர் பீடத்தினை வலம் வருபவர்களுக்கு திருமணம் நடந்தேறுகிறது. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    பசுவை மானாக மாற்றிய சித்தர் :

    ஒரு முறை அரியூர் மலையில், அரண்மனை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வேடன் ஒருவன் மலையில் உள்ள காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அங்கு நின்ற மானை வேட்டையாட அம்பை எய்தான். அம்போ தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்து, அதன் உயிரைப் பறித்தது. அரண்மனை பசுவைக் கொன்றால், அவர்களுக்கு மிகப்பெரியத் தண்டனை உண்டு. எனவே பதறிப்போன வேடன், சிவனய்யா சித்தரிடம் ஓடி வந்தான்.

    ஆனால் அவரைக் காணவில்லை. அவர்தான் சித்தராயிற்றே. அரண்மனைப் பணியில் இருந்தாலும், அவரது போக்கில்தான் சென்று கொண்டிருப்பார். அப்படி எங்கோ சென்றிருந்த நேரத்தில்தான் வேடன் வந்து நின்றான். அங்கு.. இங்கு.. என்று அலைந்து திரிந்து, இறுதியாக குளத்து கரையில் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த சித்தரைக் கண்டான்.

    அவர் காலில் விழுந்து, ‘சுவாமி! நான் மானை வேட்டையாட அம்பு எய்தேன். அது தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்துவிட்டது. அரண்மனை தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.

    ‘பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன சித்தர், அங்கிருந்து அசையவில்லை.

    வேடனுக்கோ பயம் அதிகரித்தது. ‘காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், அரண்மனைக்கு வராமல், இப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரே’ என்று நினைத்தான்.

    ஆனால் அவர் தன் தவத்தின் மூலமாக வேடனுக்கு உதவிக்கொண்டிருந்தார் என்பது வேடனுக்கு புலப்படவில்லை. ஆம்.. அரண்மனை பசு அம்படிப்பட்டு இறந்து விட்ட செய்தி கேட்டு, அரண்மனை காவலர்கள் மலை பகுதிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உண்மையிலேயே மான் தான் இறந்து கிடந்தது. தன் தவ வலிமையால், பசுவை மானாக மாற்றி வேடனைக் காப்பாற்றியிருந்தார் சிவனய்யா சித்தர். வேடன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி அங்கிருந்து புறப்பட்டான்.

    சிவனய்யா சித்தரை வணங்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வர வேண்டும். சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும் செவல் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் பாறைப்பட்டி இருக்கிறது. இங்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி கிடையாது என்பதால், ஆட்டோவில் வந்து செல்வதே வசதியாக இருக்கும்.
    தூத்துக்குடி கொம்மடிக்கோட்டை ஊரில் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை. இவ்வூரில் தான் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அத்துடன் தீராத நோயை தீர்த்து திரு அருள்புரிந்தும் வருகிறார்கள்.

    கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்த காரணத்தினால் இவ்வூர் ‘கொம்மடிக் கோட்டை’ என்ற பெயர் பெற்றுள்ளது. கொம்மடிராயன் கல்வெட்டு அருகில் உள்ள சிவாலயமான ஞானாதீஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது.

    பழங்காலம் தொட்டே இவ்விடம் பெரும் புண்ணிய பூமியாக திகழ்ந்துள்ளது. சுற்றிலும் தேரிக்காடாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் சுனையும், தோப்பும் துறவுமாக பசுமை நிறைந்த வனப்பாகவே கொம்மடிக்கோட்டை விளங்கியுள்ளது. இங்கு அகிலத்தினை காக்கும் பாலா தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். எனவே இவ்வூரை பாலாசேத்திரமென அழைக்கிறார்கள்.

    சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை அம்மன். பாலா என்பது சமஸ்கிருத பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். அன்னை பராசக்தியான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா.

    ‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலை அம்மனின் பெருமைகளை விவரிக்கிறது. ‘வாலாம்பிகை வாலையடி சித்தருக்கு தெய்வம்' என்பது வழி வழியாய் வந்த மொழி.

    வாலை அம்மனை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் க்லிம் ஸௌ' என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான், மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீ வித்தையில் மிகவும் எளிதானது பாலா மந்திரம்.

    வாலை அம்மனின் பெருமையை பலரும் பலவிதமாக பாடுகிறார்கள். இவரின் புகழ் பாட, ‘பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே...’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால் தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா...’ என்றும் பாடப்பட்டுள்ளாள். சித்தர்கள் வாலை அம்மனை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை என்கிறார்கள்.

    ‘உலகம் வாலையில் அடக்கம்’ என்பது உண்மை. வாலை அம்மனை பூஜித்து வர வேண்டுமானால், அதற்கு முற்பிறவியில் நற்பலன் இருந்தால் மட்டுமே முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாலை அம்மன் பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தான் தெரியும், எத்தனை அற்புத காட்சி எல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்று. ‘வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்களெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரிதான சூட்சுமம் ஏது?’ என்கிறார் கருவூரார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி நாத தத்துவத்தையும் சுத்தமாயையும் ஓங்கார சொருபிணி என்று சித்தர் கூடம் அவளையே போற்றுகிறது.

    இவரின் அருள் சாதாரணவர்களுக்கு தெரியுமா என்ன? ஆனால் சித்த பெருமக்களுக்கு ஞானாம்பிகா அன்னை இருக்குமிடம் தெரிந்துள்ளது.

    சுமார் 800 வருடங்களுக்கு முன்பு...

    அன்னையை வணங்க பல பல யோகிகளும், ஞானிகளும் நிறைந்த புனித மலையாம் கயிலாயத்தில் இருந்து வந்தவர்தான் வாலை குருசாமி. இவர் வாலையை தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னாள் ‘வாலை’ என சேர்த்துக்கொண்டவர். இவர் பல புண்ணிய தலத்துக்கெல்லாம் சென்று விட்டு காசி வந்தார். அங்கே.. காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா... வாலை குருசாமியின் சீடராகிவிட்டார். அவரோடு சேர்ந்து அன்னையை காண தென் திசை நோக்கி வந்தார்கள்.



    வரும்வழியில் பல மக்களுக்கு அருளாசி வழங்கினர். வேண்டும் வரம் கொடுத்தனர். பல புண்ணிய தலத்தில் தங்கி யாகங்கள் பல செய்தனர். இறுதியாக கொம்மடிக்கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலசேத்திரத்தைக் கண்டனர்.

    ‘ஆகா.. இதுவல்லவா.. புண்ணியசேத்திரம். இங்குதானே நாம் தேடி வந்த அன்னை அருள்பாலிக்கிறார்’ என வியந்து போற்றி... அங்கேயே அமர்ந்தனர்.

    ஆசிரமம் அமைத்தனர். ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் சன்னிதி அமைத்தனர். இங்கு அவர்களுடன் பல பல சித்தர்கள் வந்து யாகம் பல நடைபெற உதவினர்.

    ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குருமுகமாகவே அடையவேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டை போகர் முனிவர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றார் என்றும், தான் பெற்ற உபதேசத்தை போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர் தன்னுடைய பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது. அகத்தியர் உள்பட பல சித்தர்களும் அன்னையை புகழ்ந்து போற்றியுள்ளனர். எனவே இவ்விடம் அருள் ஆசியை அள்ளி தரும் அற்புத பூமியாக திகழ்ந்தது.

    பாலசேத்திரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்கு பலரும் வந்து சென்றனர். நோய் பட்டவர்கள் வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குருசாமியும், காசியானந்தாரும் திருமாத்திரை வழங்கினர். அந்த திருமாத்திரையை பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது. பல மூலிகைகளைக் கொண்டு, அந்த மாத்திரையை, அன்னையின் தலத்திலேயே சித்தர் பெருமக்கள் உருவாக்கினார்கள். தற்போதும் கூட இதே மாத்திரை இங்கு கிடைக்கிறது.

    மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.

    தற்போது வழங்கப்படும் இந்த மாத்திரையை, அந்த காலத்திலேயே சித்தர்கள் வழங்கியதால் பலரும் நோய் தீர்ந்து அருள் பெற்றனர். எனவே இவ்விடத்தினை ‘ஞானியர் மடம்' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    அன்னையை நாள்தோறும் வணங்கி அருள் பெற்று, பக்தர்களுக்கும் அருள் தந்துக்கொண்டிருந்த சித்தர்கள் இருவரும் யோக முதிர்ச்சி பெற்றனர். சித்துக்கள் பெற்றனர். அதன் பின் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். அன்னையின் அருளால் நம்பி வருகின்ற மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கி வந்தனர்.

    சித்தர் பெருமக்கள்அடங்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. ஆனால் அருள் ஆற்றல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வூர் மக்கள் என்னவென்று தெரியாமலேயே இங்கு வந்து அந்த அருளை பெற்று சென்றனர். தேன் நிறைந்த வாசமுள்ள மலர்களை ஈக்கள் வண்டுகள் மொய்ப்பது போன்று ‘ஆகா.. இது புண்ணிய தலம். இங்கே ஏதோ இருக்கிறது. இங்கு வந்து சென்றால் ஏதோ.. நடக்கிறது. நல்லது தோன்றுகிறது. இது புண்ணிய பூமி..' என்று நினைத்து சென்றவர்களுக்கு நல்ல அருளும் வாழ்வும் கிடைத்தது.

    அப்போது இங்கு தொடர்ச்சியாக வழிபடும் பக்தர்களுக்கு இங்கு வாலை தெய்வமும், வாலைகுரு சித்தரும், அவர் சீடர் காசியானந்தாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.

    ஆனால் எப்படி ஆலயம் கட்டுவது?. எங்கு கட்டுவது..? யாரிடம் கேட்பது?. கேட்பவருக்கு கேட்டபடி வாக்கு கொடுக்கும் அற்புத இடமல்லவா..? அங்கே ஒருவர் சொன்னார்.

    ‘இவ்விடத்தில் விபூதியை பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அவர்கள் அருள்பாலிக்கும் இடத்தினை கூறுவார்கள்’ என்றார்.

    அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே விபூதியை எடுத்து அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறு நாள் காலை விடிந்து வந்து பார்த்த போது, சித்தர்கள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினை கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலைகுரு சாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
    ×