search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science Park"

    • திருச்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள அறிவியல் பூங்காவில் புகுந்து அட்டூழியம் செய்யும் சமூக விரோத கும்பலால் பொதுமக்கள் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்
    • இது ஒரு புறம் என்றால் சமூகவிரோதிகள் மாலை நேரங்களில் பூங்காவின் பின்புற சுவர் ஏறி குதித்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுகிறார்கள்.


    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அறிவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள அறிவியல் உபகரணங்கள் அனைத்தும் செயலிழந்து உபயோகமற்ற நிலையில் கிடக்கின்றன.

    இருப்பினும் நகரின் முக்கிய பகுதியில் பூங்கா அமைந்துள்ளதாலும், விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்ற காரணத்தினாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே சமீப காலமாக பூங்காவுக்கு வருகை தரும் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. பூங்கா உருவாக்கப்பட்டதற்கான நோக்கமே கேள்விக்குறியாகி விடும் நிலையில் பூங்காவின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பல்வேறு அத்துமீறல்களுக்கு உட்பட்டு வந்தது.

    இது ஒரு புறம் என்றால் சமூகவிரோதிகள் மாலை நேரங்களில் பூங்காவின் பின்புற சுவர் ஏறி குதித்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுகிறார்கள். இதனால் மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள்.

    பூங்காவின் பின்புற சுவரையொட்டி குடியிருப்புகள் இருக்கிறது. இந்த காம்பவுண்ட் சுவர் உயரம் குறைவாக உள்ளது. மேலும் போதிய லைட் வெளிச்சமும் இங்கு இல்லை. இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட காவலாளியை மது கும்பல் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது, தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் தற்போது ஆண் போலீசாரின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல் நிலைய அதிகாரிகள் போனை எடுக்க மறுக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு தில்லை நகர் போலீசாரை உடனடியாக வரவழைப்பது சவாலாக இருக்கிறது என்றார்.

    அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் முகமது கூறும்போது, மது குடிக்கும் சமூக விரோத கும்பலின் நடவடிக்கையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொழுதுபோக்கிற்காக பூங்கா வரும் பெண்கள் குழந்தைகள் நலன் பாதிக்கப்படுகிறது.

    சிறுவர்கள் அதிக அளவில் கூடி மது அருந்துவது, அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுவது என இருந்து வருகிறார்கள்.

    ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த பூங்காவுக்கு வரும் மக்களுக்கு குடிநீர் வசதியும் இல்லை. பூங்காவின் பின்புறம் உள்ள சுவரின் உயரத்தை அதிகப்படுத்தி நன்கு வெளிச்சம் உள்ள விளக்குகளை போட்டால் மது கும்பலை கட்டுப்படுத்த முடியும். மாநகராட்சி நிர்வாகமும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்


    • திருச்சியில் ரூ.13 கோடி செலவில் அமையவுள்ள சர் சி.வி.ராமன் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
    • வருகிற செப்டம்பர் மாதம் அனைத்து பணிகளையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகர மக்கள் பொழுது போக்கும் வகையில் திரும்பும் திசையெல்லாம் பூங்காக்கள் நிரம்ப இருக்கின்றன. அதில் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. நடைப்பயிற்சிக்கான வசதிகள் இருக்கிறது.

    ஆனால் அறிவியல் பூர்வமான விஷயங்களை கற்றுக்கொள்ள சிறப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. தென்னூர் பகுதியில் அறிவியல் பூங்கா உள்ளது. ஆனால் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அங்கு செயல் இழந்து கிடக்கிறது.

    இந்த நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு என பிரத்யேக பூங்கா ஒன்று திருச்சி மாநகராட்சி சார்பில் அமைகிறது.

    மாணவர்களின் அறிவியல், பொறியியல் திறன் அறிவினை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகாமையில் சர். சி.வி.ராமன் பெயரில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இயற்கை எழில் சூழ்ந்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரூ.13 கோடி செலவில் இந்த பூங்கா அமைகிறது.

    இதன் கட்டுமான பணிகள் கடந்த 2021 ஆகஸ்டு மாதம் தொடங்கியது. இந்த பூங்காவில் மினி தியேட்டர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் நூறு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தியேட்டரில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் ஒரு மணி நேரம் திரையில் ஒளிபரப்பாகும்.

    அதேபோன்று நவீன கோளரங்கமும் அமைத்து வருகின்றனர். இதில் கோள்களின் செயல்பாடுகள், விண்வெளி ஆராய்ச்சிகள் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 இருக்கைகள் அமைக்கப்படுகிறது.

    மேலும் காற்று எதனால் மாசுபடுகிறது? அதனைத் தவிர்ப்பது எப்படி? மழைநீர் சேகரிப்பு அறிவியல் விளக்கம் போன்றவை இடம்பெற்றுள்ளது. இது தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    அது மட்டுமல்லாமல் காபி பார், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவையும் இடம்பெறுகிறது. மினி தியேட்டர், கோளரங்கம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வருகிற செப்டம்பர் மாதம் அனைத்து பணிகளையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.

    ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்ட தென்னூர் அண்ணாநகர் அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. திறந்தவெளி அரங்கமும் பயன்பாட்டுக்கு வந்தது.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 50-வது வார்டு தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகில் மத்திய அரசின் அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் திட்டத்தின் கீழ் அண்ணாநகர் அறிவியல் பூங்கா ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    இந்த பூங்காவில் 2,005 சதுர அடி பரப்பளவில் அலுவலகத்துடன் கூடிய அறிவியல் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 20 வகையான அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. உயிரி அறிவியல் பூங்கா மற்றும் ஆற்றல் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளன. ராட்சத டைனோசர் உருவங்களும் இடம் பெற்று உள்ளன. புல்வெளி தளம், அழகிய பூச்செடிகள் மற்றும் பசுமை தாவரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும், அதை 200 பேர் அமர்ந்து காணும் வகையிலும் கேலரி வசதிகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு மற்றும் ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய இந்த அரங்கம் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

    பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கி விளையாடுதல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. பெரியோர், முதியோரின் வசதிக்காக நடைபயிற்சி பாதை, பூங்காவுக்கு வரும் அனை வரையும் வரவேற்கும் வகையில் பாறைகளுடன் கூடிய செயற்கை நீருற்று, உயர்கோபுர மின் விளக்கு, அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் நேற்று இரவு பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சியாக பொழுது போக்கினார்கள். இந்த பூங்காவானது தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக, ஸ்ரீரங்கம் கோட்டம் மேலூர் ரோட்டில் ரூ.58 லட்சத்தில் நடைபயிற்சி தளம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்துடன் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. ப.குமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பூங்காவை திறந்து வைத்தனர். 
    ×