search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyamangalam forest area"

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே இக்கலூர் வனம் உள்ளது.

    இந்த பகுதி மலை உச்சியில் உள்ளது. அடர்ந்த மரங்களால் நிறைந்த இந்த பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    தற்போது கோடை வெயில் தொடங்கியதையொட்டியும் மழை பொழிவு இல்லாததாலும் வனப்பகுதி காயத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் இக்கலூர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் தீ மரங்களில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க வனத்துறையினரால் முடியவில்லை.

    இன்று (திங்கட்கிழமை) ஆசனூர் இக்கலூர் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.

    மலை உச்சியில் தீ பிடித்து எரிவதால் மேலே செல்லவும் வழியில்லை.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “வனப்பகுதியில் பிடிக்கும் தீயை தண்ணீர் ஊற்றியும் செடி, கொடி தழைகளை வெட்டி போட்டும் அணைப்போம். ஆனால் இக்கலூர் பகுதி மலை உச்சியில் இருப்பதால் எப்படி அங்கு போய் தீயை அணைப்பது? என்று தெரியவில்லை” என்று கூறினர்.

    போக முடியாத பகுதியில் தீ பிடித்தால் அந்த காட்டுத்தீ தானாகவே அணைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

    இக்கலூர் பகுதியில் பிடித்த காட்டுத்தீயால் பல பறவைகள், குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் பலியாகி விட்டன. மேலும் பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதாகவும் வன ஊழியர்கள் கூறினர்.

    இதேபோல தாளவாடி வனப்பகுதி ஜீரேகள்ளி வனத்திலும் நேற்று இரவு தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த பகுதிக்கு வனஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 3 யானைகள் பொக்லைன் எந்திரம் மூலம் வனத்துறையினர் மீட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி கடம்பூர் அருகே உள்ள கானக்குந்தூரில் அந்த பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி வழி தவறி தோட்டத்துக்குள் புகுந்தது.

    அந்த தோட்டத்தில் 70 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு இருந்தது. அந்த வழியாக வந்த 3 யானைகளும் தவறி ஒன்றன் பின் ஒன்றாக அந்த கிணற்றில் விழுந்தது.

    கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் அந்த 3 யானைகளும் தண்ணீரில் நீந்தியப்படி தத்தளித்து பலமாக பிளிறியது.

    யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு ஊர் பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். கிணற்றுக்குள் 3 யானைகள் விழுந்ததை கண்டு திடுக்கிட்ட மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னார்டு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரத்தால் யானைகள் அந்த வழியாக வரும் படி குழி தோண்டப்பட்டது.

    இதன் வழியாக 3 யானைகளும் கிணற்றில் இருந்து வெளியேறியது. பிறகு அந்த 3 யானைகளையும் சத்தம் போட்டப்படி காட்டுக்குள் விட்டனர்.

    கிணற்றில் இருந்து மீண்டு வந்த 3 யானைகளும் மகிழ்ச்சியுடன் பிளிறியபடி காட்டுக்குள் சென்றது. #Tamilnews
    ×