search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.151 crore"

    • நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
    • சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் நெல்லையப்பர் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாலை பணிகளுக்கு ரூ.151 கோடி

    இதில் மாநகராட்சிக்குட் பட்ட பல்வேறு வார்டுகளுக்கு நிறைவேற்றப்பட உள்ள திட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தங்களது தொகுதிகளின் குறைகள் குறித்து கவுன்சிலர்கள் எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:-

    2022-2023-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சாலை பணிகளுக்காக ரூ.151 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதி சாலைகளுக்காக மட்டும் ரூ.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    8 சாலைகள்

    மாநகராட்சியின் 8 சாலைகள் இதனால் உடனடியாக சீரமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் நெல்லையப்பர் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து, தொண்டர் சன்னதி- பல்கலைக்கழகம் வரை ரூ.6.97 கோடி மதிப்பிலும், மதுரை- குமரி சாலை ரூ.3.10 கோடி மதிப்பிலும், பாளை- தூத்துக்குடி சாலை ரூ.50 லட்சம் மதிப்பிலும், தச்சநல்லூர்- புதிய பஸ் நிலையம் ரூ.5.7 கோடி மதிப்பிலும், ராமையன்பட்டி சாலை ரூ.3 கோடி மதிப்பிலும், டவுன் வடக்கு மவுண்டு சாலை ரூ.2.50 கோடி மதிப்பிலும் சீரமைக்க அரசுக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.

    ஈரடுக்கு மேம்பாலம்

    ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து மேம்பாலம் ரூ.2 கோடி மதிப்பில் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நெல்லை கோட்ட பொறியாளர் கோபால் பேசியதாவது:-

    பிரத்யேக குடிநீர் அபிவிருத்தி திட்டம்

    அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை நெல்லை மாநகர பகுதிக்கான பிரத்யேக குடிநீர் அபிவிருத்தி திட்டம் என்றுதான் அழைக்க வேண்டும்.

    கடந்த 2011-ம் ஆண்டு இதற்கான கருத்துரு பெறப்பட்டு அப்போதைய மாநகர மக்கள் தொகை அடிப்படையில் 550 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என கணக்கீடு செய்யப்பட்டது. பின்னர் 2016-ம் ஆண்டு ரூ.290 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டது.

    தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. அடுத்த மாதம் 30-ந் தேதி பணிகள் முழுமையாக முடிவடையும். அதன்பின்னர் ஏற்கனவே உள்ள 44 நீரேற்றும் நிலையம், புதிதாக கட்டப்பட்டுள்ள 14 நீரேற்று நிலையம் என மொத்தம் 58 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

    இதன்மூலம் மாநகர பகுதியில் 32,594 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். 2022-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதன்மூலம் கணக்கிட்டால் 870 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இதன்படி பார்த்தால் 320 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைகிறது. அதனை ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×