search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 100 crores"

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட கழக வளர்ச்சிக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு.வெற்றிவேல் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 1964-ம் ஆண்டு சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. மேலும் அவை அரசு தேயிலை தோட்டமாக செயல்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த 1976-ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமாக(டேன்டீ) தனிவாரியம் அமைக்கப்பட்டு, நீலகிரியில் நடுவட்டம், கோவையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நலிவுற்ற நிலையில் இருந்த அரசு சின்கோனா தோட்ட பகுதிகளையும் இணைத்து சிறப்பாக இயங்கி வந்தது.

    ஆனால் சமீப காலங்களில் டேன்டீ தொழிலாளர்களுக்கு பணபலன்களை வழங்க முடியாமலும், மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்க முடியாமலும் நலிவுற்ற நிலையில் டேன்டீ உள்ளது. இதன் காரணமாக பழுதடைந்த தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், டேன்டீ தேயிலை தோட்டங்களில் எரு இடுதல், மருந்து அடித்தல், பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதால், டேன்டீ தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே டேன்டீயை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற தமிழக அரசு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் டேன்டீயை புணரமைக்க குறைந்தது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உதவவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ×