search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery police inquiry"

    ஆத்தூரில் இன்று தனியார் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை கிரேன் பஜார் பகுதியில் பெருமாள் அன் கோ என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை பெருமாள் என்பவர் நிர்வாகித்து வருகிறார்.

    இவர் இன்று காலை அலுவலக வேலை காரணமாக வெளியே சென்றார். அலுவலகத்தில் மேலாளர் சேக் தாவூத் என்பவர் இருந்தார்.

    இன்று காலை சுமார் 11 மணியளவில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தை துனியால் மூடியிருந்தனர். அவர்கள் சேக் தாவூத்திடம் நாங்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் இருந்து வருவதாகவும், கிழங்கு கொள்முதல் சம்பந்தமாக பேச வந்தோம் என்றும் கூறினார்கள்.

    ஆனால் அவர்கள் மேல் சேக் தாவூத்துக்கு சந்தேகம் வந்தது. திடீரென அதில் ஒருவன் சேக் தாவூத்தை பிடித்து கயிற்றால் கட்டி மேஜையின் சாவியை கேட்டு மிரட்டினர். மேலும் சாவியை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று கூறி மிரட்டினார்கள். சேக் தாவூத் மேஜை சாவி தன்னிடம் இல்லை என்று கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் மேஜையை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அங்கிருந்த செல்போனையும் எடுத்து சென்றனர். இதையடுத்து சேக் தாவூத் மர்ம ஆசாமி கையில் கையில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததை பற்றி கூறினார்.

    மேலும் உரிமையாளர் பெருமாளுக்கும் தகவல் கொடுத்தார். உடனே அங்க வந்த பெருமாள் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிக்கையாளர்கள் போல் வந்து இந்த முகமூடி கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×