search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rising tomato prices"

    மேல்மருவத்தூர் அருகே ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக கூறியதால் அந்த கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஞானவேல். மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்ததையடுத்து பண்டமாற்று முறையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக நூதன அறிவிப்பை வெளியிட்டார்.

    மேலும் 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் ½ கிலோ தக்காளி இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவையில் கூட்டுறவு துறையின் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தினசரி தேவையான காய்கறிகள், வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் கோவையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கோவையில் உள்ள கூட்டுறவு துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர் சாலை கிளை அலுவலகம், மலர் அங்காடி கட்டிட வளாகம், பூ மார்க்கெட் ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம் , தெலுங்கு பாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம் , பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம் , பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், கோவை மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ. 75- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    வரத்து குறைவு எதிரொலியால் தக்காளி விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
    சென்னை:

    தக்காளி விலை விளைச்சல் அதிகமாக இருக்கும் போது ஒரு கிலோ ரூ.5-க்கு கூட விற்பனையான செய்திகள் பல முறை வெளிவந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்து கொண்டே போகிறது.

    சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.65 முதல் ரூ.80 வரை விற்பனை ஆன நிலையில், நேற்று முன்தினம் ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சில்லரை விற்பனை கடைக்காரர்கள் ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து, ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.40 வரை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை (நவீன் மற்றும் நாட்டு தக்காளி ரகத்துக்கு ஏற்ப) விற்பனை ஆனது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தான் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் மழை பெய்த காரணத்தினால் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அதன் விலை அதிகரித்து இருந்தது. தற்போது ஆந்திராவில் பெருவெள்ளம் வந்ததால், அங்கு தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு, வரத்து மேலும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது' என்றனர்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 100 லாரிகளில் வந்து கொண்டு இருந்த தக்காளி வரத்து ஏற்கனவே பாதியாக குறைந்திருந்த நிலையில், தற்போது விளைச்சல் பாதிப்பால், அதைவிட குறைவான அளவிலேயே தக்காளி வரத்து இருக்கிறது. ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு வருவதற்கு முன்பு 10 முதல் 15 நாட்களுக்குள் விலை குறையத் தொடங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்க்கையில், விலை தற்போதைக்கு குறையுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அதை வாங்கி விற்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் அதை விட கூடுதலாகவும் கடைக்காரர்கள் விற்பதை பார்க்க முடிந்தது.

    குழம்பு வகைகள் உள்பட சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு தக்காளி அவசியம். அந்த வகையில் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் தக்காளி கடைசி இடத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் இல்லத்தரசிகள், தற்போது அன்றாட பயன்பாட்டுக்கான தேவைக்கு மட்டும் கிராம் கணக்கில் வாங்குகின்றனர். சிலர் கடைகளுக்கு வந்து விலையை கேட்டு, வாங்காமல் செல்வதும் நடக்க தான் செய்கிறது.
    ×