search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refuse get body"

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி
    • கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டதை சரி செய்ய சக மின் ஊழியர் சீதாராமன் என்பவருடன் ராமசாமி அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 50). இவர் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரியத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    மின்சாரம் தாக்கியது

    கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டதை சரி செய்ய சக மின் ஊழியர் சீதாராமன் என்பவருடன் ராமசாமி அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ராமசாமி கீழே விழுந்துள்ளார். இதில் தீக்காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பலி

    இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவர் இறப்பதற்கு முன்பாக சக மின் ஊழியரான சீதாராமன் மின்சாரத்தை அணைக்காமல் விட்டதால் மின்சாரம் தாக்கியதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் சீதாராமனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போராட்டம்

    இதற்கிடையே ராமசாமி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை மின்சாரத்துறை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள், பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டம் இன்றும் 2-வது நாளாக தொடர்கிறது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


    ×