search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Assassination Case"

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பது தான் கருணாநிதி ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த தி.மு.க.வின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக்கூட்டத்தைக் கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும், 27 வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னருக்கு முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து பரிந்துரை செய்து, குற்றவாளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவிப்பவர்களை விடுவிக்கும் சூழல் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு தலையிடாமல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு ஆறுதலை ஏற்படுத்தி, பால்வார்த்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி, அதில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை வழங்க வேண்டுமெனவும், இப்பரிந்துரையினை ஏற்று தமிழக கவர்னர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7 தமிழர்களும் எதிர்கொண்டு வரும் இருள் நிறைந்த பாதை முடிவடைந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் நோக்கத்துடன் சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இப்பொழுது தமிழ்நாடு அரசுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது; இதனைப் பயன்படுத்தி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாடே எதிர்ப்பார்த்திருக்கும் நல்லதோர் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை உளமார பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. இதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி, 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். #RajivCaseConvicts
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 11-ந் தேதியுடன் (இன்று) 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனை காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நீதிகிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவர்கள் விடுதலையாவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×