search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain water canal work"

    • 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    கொளத்தூர்:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர்கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி இன்னும் முழுமையாக முடியாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கொளத்தூர் தொகுதியில் சுமார் ரூ.120 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் கொளத்தூர் திருமுருகன் நகர், டீச்சர்ஸ் கில்ட் காலனி, வி.வி. நகர் பூம்புகார் நகர், ஜெயராம் நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நிறைவடையாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகன ஓட்டிகளையும், அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.

    மேலும் பல இடங்களில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொளத்தூர் மூகாம்பிகை கோவில் மெயின் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது.

    பூம்புகார் நகர், வி.வி.நகர் பகுதியில் கால்வாய்க்கு பள்ளம்தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கலந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் மழை நீர் வடிகால் பணி முடிந்த பல சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து தோண்டப்பட்ட இடங்களில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பூம்புகார் நகரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் கழிவுநீரால் நிரம்பி உள்ளன. குடிநீர் வாரிய அதிகாரிகள் அதனை சீரமைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. மீண்டும் சில நாட்களில் மற்ற தெருக்களில் இதே பிரச்னை ஏற்படுகிறது. கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய், மின்வயர்கள் சேதம் அடைந்து உள்ளன. உடைந்த குடிதண்ணீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி முடியாததால் இதனை சீரமைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணியை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்றார்.

    ×