search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragi koozh"

    கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.
    கடந்த தலைமுறைகளில் சிறுதானியங்கள் மறந்து போய் விட்டிருந்தாலும், அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு. கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை. மேலும் இதன் எந்த பகுதியும் நீக்கப்படுவதும் இல்லை. எனவே இதன் சத்துக்களில் எந்த இழப்பும் ஏற்படாமல் பயன்படுத்தப்படுகிறது.

    கேழ்வரகுவில் க்ளூட்டன் என்ற புரதம் கிடையாது. பால், க்ளூட்டன் போன்றவைகளின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்று கேழ்வரகு.

    கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த அரிசியில் கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம்.



    இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்கறி குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

    கூழினால் கிடைக்கும் நன்மைகள்

    கேழ்வரகை கூழாக மட்டுமின்றி தோசையாகவும், அடையாகவும், சப்பாத்தியாகவும் (சிறிது கோதுமை மாவுடன் சேர்த்து), இடியாப்பமாகவும் செய்தும் சாப்பிடலாம். கேழ்வரகுவில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகுவில் 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு கேழ்வரகு. கேழ்வரகு கூழை புளிக்க வைக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் கேழ்வரகு மாவை கஞ்சியாக செய்து கொடுப்பதே பிறந்த குழந்தைகளுக்கான முதல் உணவாக இருக்கிறது.

    மற்ற தானியங்களை விட கேழ்வரகுவில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதன் தோலில் பால்ஃபெனால்ஸ் இருப்பதால் இது நீரிழிவு உள்ளவர்களுக்கும் நல்லது. மேலும் இதில் இயற்கையான விட்டமின் டி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. முளை கட்டிய ராகியும், புளித்த ராகியும் உடல் இந்த சத்துக்களை சுலபமாக கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ஆடி மாத திருவிழாவின் போது மட்டும் என்றில்லாமல் கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.
    ×