search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Central Prison"

    சென்னை புழல் சிறையில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail

    செங்குன்றம்:

    கும்மிடிப்பூண்டி சுவாமி ரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பரத் என்கிற சிவபரத் (27). ஒரு வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் பரத் ஜெயில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். சிறை போலீசாரை பார்த்ததும் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது அறையில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு செல்போன், சார்ஜர், 2 சிம்கார்டு ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு செல்போன், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை எங்கிருந்து வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கைதியிடம் செல்போன் சிக்கியுள்ளது. #PuzhalJail

    சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    ராயப்பேட்டையை சேர்ந்தவர் விமலநாதன் என்கிற சைகோ விமல் (24). திருட்டு வழக்கு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தான் அடைக்கப்பட்டிருந்த சிறை வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த சிறை காவலர்கள் அதை பார்த்து விட்டனர். உடனே விமலநாதன் தான் பேசிக் கொண்டிருந்த செல்போனை கழிவறையில் வீசி விட்டார். இதற்கிடையே அதிகாரிகளுடன் வந்து அங்கு சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்து செல்போனை எடுத்தனர்.

    இது குறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலமானதால் 2 தலைமை வார்டர்கள் உள்பட 8 வார்டர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். #PuzhalJail
    சென்னை:

    சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 5 கைதிகள் திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா உத்தரவின் பேரில் தண்டனை சிறையில் பணிபுரிந்த தலைமை வார்டர்கள் விஜயராஜ் ஊட்டி கிளை சிறைக்கும், கணேசன் செங்கம் கிளை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

    இதேபோல் வார்டர்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வக்குமார், பிரதாப்சிங் ஆகியோர் கோவை சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் சிறைக்கும், சுப்பிரமணியன் திருச்சி சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர். #PuzhalJail
    புழல் ஜெயில் கைதிகள் கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரிய வந்து தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuzhalJail

    சென்னை:

    குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதற்காக ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.

    ஜெயில் கைதிகள் வசதியாக இருக்கும் படங்களும் செல்போன் மூலம் வெளியானது. லஞ்ச புகார்களும் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கடந்த 3-ந் தேதி புழல் சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் இருக்கும் ஒருவரிடம் இருந்தும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த ஜெயிலில் இருக்கும் முகமது ரியாஸ் என்பவரிடம் இருந்தும் 2 நவீன ஆன்ட்ராய்டு செல்போன்களும், ஒரு சாதாரண செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்த செல்போன்களை வைத்திருந்த கைதிகள், ஜெயிலில் இருந்தபடியே வாட்ஸ்-அப் மூலம் வெளி நாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதுதவிர ஜெயிலில் இருந்தே செல்போன் மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த கைதிகளின் செல்போன் தொடர்புகளை கண்டறிவதற்காக சி.பி.சி. ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போன்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். ஜெயில் கைதிகள் செல்போன் பயன்படுத்த உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடை பெற இருக்கிறது. #PuzhalJail

    ×