search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliyanthoppu"

    புளியந்தோப்பில் குழந்தை கடத்திய 2 பெண்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தம்பதியின் மகன் அஜய் (3). புளியந்தோப்பில் உள்ள உருது பால்வாடி பள்ளியில் சிறுவன் அஜய் படித்து வந்தான். கடந்த மாதம் 29-ந்தேதி மதியம் இந்த பள்ளிக்கு வந்த 2 பெண்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.

    சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் வியாசர்பாடியை சேர்ந்த குட்டியம்மாள் (37). அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோர் சிறுவன் அஜய்யை கடத்தியது தெரிய வந்தது.

    கடத்தப்பட்ட சிறுவனை ஓட்டேரியை சேர்ந்த ஜோதி (50) என்ற பெண் ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கினார். இதையடுத்து குட்டியம்மாள், ஜோதி, ஐஸ்வர்யா ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் குழந்தையை கடத்திய குட்டியம்மாள், விலைக்கு வாங்கிய ஜோதி ஆகியோரை சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதற்கான உத்தரவு புழல் ஜெயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஜெயிலில் இருக்கும் குட்டியம்மாள், ஜோதி ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சட்டப்படி 2 பேரும் ஒருவருடம் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் குழந்தை கடத்தலில் 2 பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×