search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priyanka vadra"

    புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட உ.பி. மாநிலத்தை சேர்ந்த வீரரின் இல்லத்துக்கு இன்று சென்ற ராகுல் காந்தியும் பிரியங்காவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். #RahulPriyanka #CRPFjawan #UPCRPFjawan
    லக்னோ:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    வீரமரணம் அடைந்த அனைவரின் உடல்களும் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் மற்றும் தகனம் செய்து முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல் ஏற்படுத்திய சோகம் இந்திய மக்களின் மனங்களில் ஆறாத ரணமாக பதிவாகி விட்டது.



    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அமித் குமார் கோரி என்ற வீரரின் நினைவாக இன்று அவரது இல்லத்தில் பிரார்த்தனையுடன் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா, உத்தரப்பிரதேசம் மாநில கரும்பு உற்பத்தித்துறை மந்திரி சுரேஷ் ராணா உள்ளிட்டோர் பங்கேற்று அமித் குமார் கோரியின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அமித் குமார் கோரியின் குடும்பத்தாரிடையே பேசிய ராகுல் காந்தி, இந்த துயரமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருப்பதை தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கிறோம். தனது மகனை இழந்து வேதனைப்படுவதாக தெரிவித்த அமித் குமாரின் தந்தை, அவர் நாட்டுக்காக உயிர் துறந்ததை எண்ணி பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.

    இந்த நாட்டுக்காக தனது அன்பையும், உடலையும், உயிரையும் தியாகம் செய்த அந்த பெருமைக்குரிய மகனை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம். இந்த தியாகத்தை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம்.

    உங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய எனது தங்கை பிரியங்கா எங்கள் தந்தை ராஜிவ் காந்தியும் பயங்கரவாதத்துக்கு பலியானதால் உங்கள் துயரத்தையும் வேதனையையும் எங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றார்.



    இந்தியா என்பது ஒரே நாடு. இந்த இந்தியா நம் அனைவருக்குமானது. இது அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவும் நாடு. எங்களது இதயத்தின் அடித்தளத்தில் இருந்தும் இந்த நாட்டின் சார்பாகவும் உங்கள் மகனுக்கும் இந்த குடும்பத்தார் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    பின்னர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இதே ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வீரர் பிரதிப் குமார் இல்லத்துக்கு சென்ற ராகுல் காந்தியும், பிரியங்காவும் அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். #RahulPriyanka #CRPFjawan #UPCRPFjawan
    ×