search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polluted"

    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.
    • குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.

    உடுமலை :

    உடுமலையில் ஏழு குளம் பாசனம் மற்றும் பி.ஏ.பி., தளி கால்வாய், உடுமலை கால்வாய், பிரதான கால்வாய் முக்கிய நீராதாரங்களாக உள்ளன.கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.

    இத்தகைய நீராதாரங்களை பாதுகாத்து பராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் நீர்நிலைகள் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக ஏழு குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.மேலும் கிராமங்களிலுள்ள பிற குளங்கள் அனைத்தும் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் என குப்பை கொட்டும் இடமாக மாற்றப்படுகிறது.

    அதே போல் தளி கால்வாய், உடுமலை கால்வாயின் வழியோரத்திலுள்ள தளி பேரூராட்சி, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில்குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது.மேலும் கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் குப்பை கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தளி பேரூராட்சியிலிருந்து கழிவுகள், குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் மற்றும் வழியோர குடியிருப்புகளின் கழிவுகளும் தளி கால்வாயில் நேரடியாக கலக்கிறது.இக்கால்வாய் வழியாக 7 குளங்களுக்கு நீர் செல்வதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. வாய்க்காலில் அதிக அளவு சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது.

    பாசன நீருடன்கழிவு நீரும் கலந்து குளங்களில் தேங்குவது மற்றும் விவசாயம், குடிநீருக்கும் பயன்படுத்தும் போது, மக்களும் பாதிக்கின்றனர். ஜல்லிபட்டி ஊராட்சி கழிவுநீர் மற்றும் குப்பை, இறைச்சிக்கழிவுகள், தென்பூதிநத்தம், அம்மாபட்டி குளத்தில் நேரடியாக கலக்கப்படுகிறது. போடிபட்டி ஊராட்சி மற்றும் குடியிருப்புகளிலிருந்து, ஒட்டுக்குளத்தில் சாக்கடைக்கழிவுகள் கலப்பதோடு, குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது.பள்ளபாளையம் ஊராட்சிப்பகுதியிலிருந்து செங்குளத்தில் இதே போல், கழிவுகள் கலக்கிறது.

    எனவே, தளி கால்வாய் மற்றும் ஏழு குளங்கள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் தளி கால்வாய் வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும், உடுமலை கால்வாய், பூலாங்கிணர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் வழியோரத்தில், நீர் நிலைகளை மாசுபடுத்தும் வகையில் அமைந்துள்ள கழிவு நீர் கலக்கும் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பை கொட்டும் மையங்களை அகற்ற வேண்டும்.உடுமலை பகுதிகளின் பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரங்களாக உள்ள நீர் நிலைகளை காக்க, உரிய நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×