என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pg exam"

    • இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும்.
    • 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 9-ந்தேதி நடத்த இருந்த தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவ மேற்படிப்பு (PG) மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில் குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 2021-22 ஆண்டுகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி இறுதித் தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்தது.

    இதற்கு முன்பாக இணையதளம் வழியாக ஆராய்ச்சி கட்டுரைகளை தாக்கல் செய்து அதை மருத்துவ இதழில் வெளியிட்டு இருக்க வேண்டும் எனவும் ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்ய நவம்பர் 29-ந்தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான இணையதள சேவை காரணமாக ஆன்லைனில் உரிய நேரத்தில் ஆய்வுக் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதில் கால விரயம் ஏற்படுவதால், தங்களால் இறுதி தேர்வுக்கு தயாராக முடிவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும் இறுதித் தேர்வுக்கும் போதுமான இடைவெளி இல்லாததால் தேர்வு எழுதும் மருத்துவ மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதித் தேர்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

    அந்த அடிப்படையில் தங்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 3 வருட உழைப்பு வீணாகி விடும் என்பதால் ஆய்வு கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும், இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் டிசம்பர் 9-ந்தேதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ மேற்படிப்புக்காக அறிவித்திருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இறுதி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவினை பின்பற்றி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சிங் சவுதாலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வர டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. #AjayChautala
    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் ஊழல் செய்தது தொடர்பாக இந்திய தேசிய லோக் தள் தலைவர் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில், அஜய் சிங் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார். 

    இந்நிலையில், சிறையில் இருந்தபடியே தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படித்து வரும் அஜய் சிங் சவுதலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வருகிறார்.

    அவ்வகையில், நாளை நடைபெற உள்ள தேர்வை எழுதுவதற்காக பரோலில் அரியானா செல்ல அனுமதி கேட்டு அஜய் சிங் சவுதாலா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரியானா மாநிலம் சிர்சாவில், நாளை பிற்பகல் பி.ஜி. டிப்ளமோ தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கோயல், தேர்வு எழுதுவதற்காக அஜய் சவுதாலாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார். இன்று சவுதாலாவை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும், ஜூலை 1-ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #AjayChautala
    ×