search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peacock - rabbit"

    • முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது.

    காங்கயம்:

    பொதுவாக வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் முயல், கீரி, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேய்ச்சல் நிலங்கள் அதிகளவில் இருந்தன. அதில் செம்மறியாடுகள், மாடுகள் மேய்வதற்காக மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைத்து சொந்தப் பயன்பாட்டுக்கு அறுவடை செய்தது போக மீதமுள்ளவற்றை ஆடு, மாடுகளை மேயவிடுவது வழக்கம்.

    அது போன்ற மேய்ச்சல் நிலங்களில் பாம்புகள், உடும்பு, கீரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக காணப்படும். இதில் பாம்புகளை கணிசமான அளவில் கீரிகள் வேட்டையாடிவிடும். கீரி, முயல், உடும்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்துவர். இதனால் முயல், கீரி உள்ளிட்ட விலங்குகளின் பெருக்கம் என்பது கட்டுக்குள் இருந்தது.

    காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், தொழில் கூடங்களாகவும் மாறத் தொடங்கியதும் வன விலங்குகளின் வாழ்விடங்களும் குறையத் தொடங்கின. அதே நேரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுதல் தடையை அதிகாரிகள் உறுதியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதால் வேட்டையாடுதல் என்பது குறைந்து போனது. இதனால் முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக காங்கயம் பகுதி கிராமங்களில் முயல்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. காடுகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் முயல்கள் குட்டிபோட்டு தங்கள் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முயல்கள் பசுந்தீவனத்தைதான் அதிகமாக விரும்பி உண்ணும் என்பதால் கொழுக்கட்டை புற்கள் வளர்ந்து நிற்கும் காடுகள், ஆடு, மாடுகளுக்காக பயிரிட்டுள்ள நிலங்கள், வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்கள் செய்யப்பட்ட நிலங்களில் இரவு நேரத்தில் மேய்ந்துவிட்டு பகல் நேரங்களில் சிறிய புதர்களுக்குள் சென்று ஓய்வெடுத்து வருகிறது.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது:-

    தற்காலத்தில் முயல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. வேட்டையாடுதல் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவில் யாரும் வேட்டையாடுவது இல்லை. அதிகரித்து வரும் முயல் கூட்டம் இரவு நேரங்களில் விவசாய பயிர்களையும் கடித்து சேதப்படுத்துகிறது. தொடர்ந்து முயல்களின் பெருக்கம் அதிகரித்தால் அது விவசாயிகளுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன. பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன. தானியங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, தட்டைப் பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும்.

    மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது. குறிப்பாக கிராமங்களில் காக்கை, குருவிகளை காட்டிலும் மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. புதர்களுக்குள்ளும், ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. முன்பு நரிகள் அதிகமாக இருந்ததால் அவைகள் மயில்கள் இடும் முட்டைகளை தின்று விடும்.ஆனால் தற்ேபாது நரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் மயில்களின் பெருக்கம் அதிகமாகி மதிய நேரங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களில் சென்று ஓய்வெடுத்துவிட்டு காலை,மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுத்து சென்று பயிர்களை கொத்தி சேதப்படுத்துவதுடன் பயிர்களை மிதித்தும் சேதம் செய்வதாக விவசாயிகள் கவலை ெதரிவித்தனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "கடந்த 10வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் 3 முதல் 4 மயில்களே செல்லும். ஆனால் தற்போது அதிக பெருக்கத்தால் ஒரு மயில் கூட்டத்தில் 10 முதல் 15 மயில்கள் செல்கின்றன. மக்காச்சோளம், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்களை கொத்தி தின்பதோடு கால்களால் மிதித்தும் சேதம் செய்து விடுகிறது. தவிர சோளம், தட்டை உள்ளிட்ட விதைகளை விதைத்து அது முளைவிடும் தருணத்தில் வேரோடு பிடிங்கித் தின்றுவிடுகின்றன. முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை சேதம் செய்வதால் செய்வதறியாது தவிக்கிறோம். எனவே மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

    ×