search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neglected"

    ஒரே குடும்பத்தின் புகழ் பாட முயற்சித்ததில், நாட்டுக்கு உழைத்த பிற தலைவர்களின் உழைப்புக்கு முக்கியத்துவம் தராமல் போவதா என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் சாடினார். #Modi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் மோகன்புராவில், கட்டப்பட்டு உள்ள ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான மோகன்புரா அணையை அங்கு நேற்று நடந்த விழாவில் மாநிலத்துக்கு அர்ப்பணித்து வைத்தார். மேலும், 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும் பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, “இந்த திட்டங்களுடன் தொடர்பு உடைய ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த திட்டங்களின் உண்மையான தொடக்க விழா என்பது உங்களின் உழைப்பாலும், வியர்வையாலும் செய்யப்பட்டது ஆகும்” என்று குறிப்பிட்டார்.



    பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து பேசுகையில், “டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் எண்ணங்கள் கல்வி, நிதி, வளர்ச்சி ஆகியவற்றில் சங்கமித்து இருந்தன. அவர் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அவரது பார்வை தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என புகழாரம் சூட்டினார்.

    அதே நேரத்தில் நாட்டில் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தின் (சோனியா காந்தியின்) புகழ் பாட முயற்சிகள் மேற்கொண்டபோது, நாட்டுக்கு உழைத்த பிற உயர்ந்த தலைவர்களின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் தராமல் போய்விட்டது துரதிர்ஷ்டவசமானது என்று சாடினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு வெற்றிகரமாக 4 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி, சியாம பிரசாத் முகர்ஜியின் பார்வையுடன் இணைந்தது ஆகும். ஆனால் சிலர் தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் உண்மையான கள நிலவரத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். இங்கு நீங்கள் இவ்வளவு பேர் கூடி இருப்பதே அதற்கு சாட்சி.

    மக்கள் நல திட்டங்கள், மக்களை போய்ச்சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. முன்பு இருந்த அரசுகள் (காங்கிரஸ் அரசுகள்) இவற்றை செய்து முடித்து இருக்கலாம். அவர்களை யாரும் தடுத்து நிறுத்தியது கிடையாது.

    ஆனால் நாட்டை மிக நீண்ட காலம் ஆண்ட கட்சி (காங்கிரஸ்) உங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் எங்கள் அரசு மக்கள் மீதும், வளர்ச்சியின்மீதும் நம்பிக்கை வைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×