search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Bhaskaran"

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 304 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திறமையாக நடத்தி, பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதன்படி அரசின் பல்வேறு திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் 304 பேருக்கு ரூ.3 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாயிலும், வைகைப் பாசன கால்வாயிலும் முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் விவசாயத்திறக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம்.

    அதேபோல் சிவகங்கை நகர்பகுதியில் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நீர்வரத்துக்கால்வாய் சீர் செய்யப்படும். மேலும் வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஆஷா அஜீத், தாசில்தார் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, துணை தாசில்தார் நேரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், தேவகோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுந்தரலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முகவை நெல்சன், பெருவத்தி, முருகன், தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சரவணன், நகர இளைஞரணி செயலாளர் சுபகார்த்திகேயன், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    சிவகங்கை அருகே கொல்லங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்து அங்கிருந்த பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கொல்லங்குடி, கீரனூர் கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியாக்குறிச்சி, அழகாபுரி மேப்பல், பெரிய நரிக்கோட்டை, நடுவாளி, தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.

    முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    மேலும் அங்குள்ள குடிநீரை குடித்து பார்த்த அமைச்சர் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    ×