search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
    X

    304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 304 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திறமையாக நடத்தி, பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதன்படி அரசின் பல்வேறு திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் 304 பேருக்கு ரூ.3 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாயிலும், வைகைப் பாசன கால்வாயிலும் முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் விவசாயத்திறக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம்.

    அதேபோல் சிவகங்கை நகர்பகுதியில் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நீர்வரத்துக்கால்வாய் சீர் செய்யப்படும். மேலும் வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஆஷா அஜீத், தாசில்தார் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, துணை தாசில்தார் நேரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், தேவகோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுந்தரலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முகவை நெல்சன், பெருவத்தி, முருகன், தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சரவணன், நகர இளைஞரணி செயலாளர் சுபகார்த்திகேயன், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×