search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Primary School"

    • முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் பரிசு வழங்கினார்
    • சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலரும் சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் சில்வர் வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி, திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி மற்றும் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை அருகே கொல்லங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்து அங்கிருந்த பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கொல்லங்குடி, கீரனூர் கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியாக்குறிச்சி, அழகாபுரி மேப்பல், பெரிய நரிக்கோட்டை, நடுவாளி, தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.

    முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    மேலும் அங்குள்ள குடிநீரை குடித்து பார்த்த அமைச்சர் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    கரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியின் தேவைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்.
    கரூர்:

    கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியாம்பாளையம் எனும் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியானது சிறிய கட்டிடத்தில் இயங்கிய போதிலும் மாணவர்களின் கல்வியையும், அவர்களது தனித்திறமையையும் மேம்படுத்துவதில் ஆசிரிய- ஆசிரியைகள் ஆர்வமாக செயல்படுகின்றனர். மேலும் மாணவர்களிடத்தில் உள்ள நிறை- குறைகளை அவர்களது பெற்றோரிடத்தில் எடுத்து கூறி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் ஊர் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோரும் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்காக தங்களால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வருகின்றனர். இதன் காரணமாக பெற்றோர்- ஆசிரியர்களிடத்தில் சரியான புரிதல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டில் சிவியாம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீர்வரிசையாக கொடுக்க பொதுமக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் நோட்டு புத்தகம், பேனா-பென்சில் பாக்கெட்டுகள், சாக்பீஸ் பெட்டிகள், கடிகாரங்கள் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றனர். பின்னர் திருமண சீர்வரிசை கொண்டு வருவதை போல தாம்பூல தட்டுகளில் அந்த பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை பெமினா விழிமலரிடம் அந்த பொருட்களை கல்வி சீர்வரிசையாக ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா வரவேற்று பேசினார். ஊரின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிராம கல்விக்குழு தலைவர் மகேஷ் மற்றும் இந்திராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தலைமை ஆசிரியை பெமினா விழிமலர் பேசினார்.

    இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினை போன் மூலம் தொடர்பு கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமியப்பன், பொதுமக்கள்- பள்ளி ஆசிரியர்கள் நல்லுறவு தொடர வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் சிவியாம்பாளையத்தில் தொடக்க பள்ளி முடிந்ததும் அடுத்த கட்ட கல்வி பயில சில கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. சரியான பஸ் வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் காலை, மாலை வேளையில் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×