என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matchbox"

    • புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-

    சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.

    புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .

    தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #lorrystrike
    கோவில்பட்டி:

    தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் தினமும் 600 தீப்பெட்டிகள் கொண்ட 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.

    கர்நாடகா, மகராஷ்டிரா, அசாம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜம்மு உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. தீப்பெட்டிகளுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் டீசல் விலை உயர்வு கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும், தீப்பெட்டி பண்டல்கள் தொழிற்சாலைகளிலும், லாரி ஷெட்டுகளிலும் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி மதிப்பிலான தேங்கி கிடக்கின்றன.

    இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து வேலை நடத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதமாக குறைக்க, மாநில அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு முன்வரவில்லை.

    இந்நிலையில், இயற்கை சீற்றங்கள், லாரிகள் வேலை நிறுத்தம், கூடுதல் ஜி.எஸ்.டி. போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. தீப்பெட்டி மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமலும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 2 வாரமாக சம்பளம் வழங்க முடியாமலும் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

    மேலும், தீப்பெட்டி சார்பு தொழிலான வெள்ளை குச்சி தயாரித்தல், ஸ்கிரீன் கோரிங், பிரிண்டிங், அட்டை, குளோரேட், சல்பர், மெழுகு போன்ற மூலப்பொருட்கள் விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    எனவே, மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நீண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் கோவில்பட்டி நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள தனியார் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் லாரி வேலை நிறுத்தம் குறித்தும், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல்ஜெயின், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். #lorrystrike
    ×