search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver money robbery"

    சிதம்பரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் பொருட்கள் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதியில் வசித்து வருபவர் சையுப்அன்சாரி. இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டு பொருட்களை ஏற்றி செல்வதற்காக சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 47). என்பவரின் லாரியை வாடகைக்காக சிதம்பரம் வரவழைத்தார்.

    அதன்படி சங்கர் நேற்று காலை சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்டார். மேலும் வீட்டு பொருட்களை ஏற்றுவதற்கு உதவிக்காக பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்த சந்தன் குமார் (20), சோனு (19) ஆகிய இருவரையும் உடன் அழைத்து கொண்டு லாரியில் சிதம்பரம் நோக்கி வந்தார்.

    நேற்று நள்ளிரவு லாரி சிதம்பரம் கீழ்பாலம் புறவழி சாலை அருகே வந்தபோது டிரைவர் சங்கருக்கு தூக்கம் வந்தது. இதனால் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சங்கர், சந்தன்குமார், சோனு ஆகிய 3 பேரும் லாரியிலேயே படுத்து தூங்கினர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், சாலை ஓரமாக லாரி நிற்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் லாரி அருகே சென்று பார்த்த போது லாரியில் வந்தவர்கள் அசந்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.

    உடனே மர்ம நபர்கள் 3 பேரும் லாரியின் கண்ணாடியை உடைத்து கொண்டு லாரிமீது ஏறினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தியால் டிரைவர் சங்கரை சரமாரியாக குத்தினர். இதில் சங்கர் நிலைகுலைந்து போனார். அந்தசமயத்தில் அவரிடமிருந்த ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்தனர்.

    மேலும் லாரியில் வந்த வடமாநில வாலிபர்களையும் மிரட்டி அவர்களிடமிருந்து ரூ.800 மற்றும் செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவைகளை பறித்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயமடைந்த சங்கர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த லாரியை சேதப்படுத்தி டிரைவரை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×