search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu Bridge"

    ரூ. 94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தை கடந்த 1-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
    சென்னை:

    கோயம்பேடு நூறடி சாலை-காளியம்மன் கோவில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக நூறடி சாலை - காளியம்மன் கோவில், புறநகர் பேருந்து நிலைய நுழைவு வாயிலை இணைத்து மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

    மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த மேம்பால பணி கடந்த  டிசம்பர் மாதத்துக்கு பிறகு வேகமாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்தது.

    ரூ. 94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தை கடந்த 1-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பலத்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பால சாலை சேதம் அடைந்து இருக்கிறது. 

    சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழையினால் கோயம்பேடு மேம்பால சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. திறக்கப்பட்ட 10 நாட்களில் கோயம்பேடு மேம்பால சாலை சேதம் அடைந்து இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் ஒருநாள்  மழைக்கே மேம்பால சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

    இந்த சாலையை சீரமைத்து தரமற்ற சாலைகள் அமைத்ததற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இரு அடுக்கு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    சென்னை:

    சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது.

    இதனை கருத்தில் கொண்டு வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் பகுதியில் இரு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இதே போல் கோயம்பேடு பஸ் நிலையம் முன்பும் ரூ.93 கோடி செலவில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

    கொரோனா காரணமாக மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்போது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த மேம்பாலத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் நேரில் சென்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

    முதலில் வேளச்சேரி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு 2 அடுக்கு மேம்பாலத்தின் மேல் பகுதியை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

    இந்த மேம்பாலம் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்பேடு சென்றார். அங்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எ.வ. வேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, ஹசன்மவுலானா மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த இரு மேம்பாலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் வாகனங்கள் நெரிசல் இன்றி எளிதில் கடந்து சென்றன.

    தினமும் காலை- மாலை நேரங்களில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் இனி பெருமளவு குறையும்.


    ×