search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karamadai ranganathar temple"

    காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் ஆகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதைதொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் மணக்கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் தேரில் எழுந்தருளினார். இதையொட்டி பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5.15 மணிக்கு நடந்தது. கோவில் மிராசுதாரர்கள், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... ரங்கா... என்று கோஷமிட்டபடி சென்றனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் வாழை பழங்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர் இரவு 9.10 மணியளவில் தேர்நிலைக்கு வந்தடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, பேரூர் செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் தலைமையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேர் திருவிழாவில் அ.தி.மு.க. 4-வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ரங்கநாதன், மீன் குளத்தி பகவதி அம்மன் பஜனை வழிபாட்டு குழு ஆறுச்சாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மனோகரன், இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு, இந்து அறநிலைய துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், செயல் அலுவலர்கள் ஜெயசந்திரன், செல்வராஜ், ராமஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான க.விமலா, செயல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன், கோவில் கணக்கர் மகேந்திரன் உள்பட பலர் செய்து இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவமும், 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சந்தன சேவையும் நடக்கிறது.

    23-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா முடிவடைகிறது. 
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. கோவிந்தா...கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களை விட மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் வைகுண்ட ஏகாதசி எனப்போற்றப்படும் இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந் தேதி திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    அரங்கநாத பெருமாளை போற்றி தினமும் 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங் களை நல்லான்சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் பாடினர்.

    வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார். காலை 5.30 மணியளவில் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியே பெருமாள் வெளியே வந்தார். அப்போது கோவிந்தா...கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே சொர்க்கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். பின்னர் பெருமாள் கோவில் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரபந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சிகள் சுதர்சன பட்டர் சுவாமிகள், காரமடை ஊர்கவுடர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் டி.டி.ஆறுமுகசாமி, ராஜகோபால் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சொர்க்க வாசல் வீதி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் 30-க்கும் மேற்பட்ட சமுதாய சங்கத்தினர், பொதுநல சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல்களுக்கு பெருமாள் அழைத்து வரப்பட்டு, மண்டப கட்டளைகளை ஏற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீதேவி, பூதேவியுடன் நகர்வலம் வந்த அரங்கப்பெருமாளுக்கு பின்னால் தாசபளஞ்சிக மகாஜன சங்கம் மற்றும் சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர் ஆடிப்பாடி வந்தனர்.

    இரவு 10.30 மணிக்கு இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான கா.விமலா, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், கோவில் கணக்கர் மகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். வருகிற 25-ந் தேதி இரவு 8 மணியளவில் திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சிக்காக அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். 27-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது.
    ×