search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram girl molested"

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி எங்கள் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மற்றும் அவரது நண்பரான அற்புதராஜ் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.

    ஆனால் நாங்கள் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியாது எனக் கூறி விட்டோம். மீண்டும் சில நாட்கள் கழித்து வந்த அவர்கள் வீட்டு வேலைக்கு மகளை அனுப்புமாறும் வேலை பிடிக்கவில்லை என்றால் அவளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் எங்களது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

    இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட எங்கள் மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டோம். அப்போது வேண்டும் என்றால் நீயே வந்து அழைத்துச் செல் என்று வேளாங்கண்ணியும், அற்புத ராஜூம் அலட்சியமாகக் கூறினர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் மகளை அழைத்துச் செல்ல அவர்கள் வந்தனர். ஆனால் எங்கள் மகள் அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று அழுதபடி கூறினார்.

    இதுபற்றி மகளிடம் கேட்ட போது, வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை சென்னை, செங்கல்பட்டு, வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை செல்போனிலும் படம் பிடித்து மிரட்டினர்.

    இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் ஆபாச வீடியோவை வெளியிடுவதோடு பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்தாள்.

    மகளுக்கு அற்புதராஜ் போதை மருந்து கொடுத்து சுய நினைவு இழக்கச் செய்து இரவு பகல் பாராமல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிறுமியை அற்புதராஜும், வேளாங்கண்ணியும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து படைத்துள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் பல நாட்கள் தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோருடன் அவர்கள் சிறுமியை நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.

    இதில் அற்புதராஜ், வேளாங்கண்ணியுடன் சேர்ந்து ஒரு கும்பலே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளது.


    சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்திருப்பதை அறிந்ததும், ஒரு கும்பல் அவர்களை மிரட்டி உள்ளனர். ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்தெந்த இடங்களுக்கு அழைத்து சென்றனர் என்பது குறித்து சிறுமியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதில் வடபழனியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட பலர் உள்ளனர்.

    சிறுமியின் புகார் பற்றி அறிந்ததும், அற்புதராஜும், வேளாங்கண்ணியும் தலைமறைவாகி விட்டனர். வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது கணவர் தற்போது அவருடன் இல்லை. இதையடுத்து வேளாங்கண்ணி காதலனான அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    தப்பிஓடிய அவர்கள் 2 பேரும் சிக்கினால்தான் அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.

    காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஓட்டல் தொழிலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

    தற்போது காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×