search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "juice factory"

    • செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.
    • தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.

    அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கார், பிசான சாகுபடிக்கு அடுத்ததாக பூ மகசூலான தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, பூசணிக்காய், பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

    இந்நிலையில் தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தக்காளி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ரூ. 4-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ஆனால் ஒரு கிலோ தக்காளியை பயிரிட ரூ. 8 வரை செலவாகும் நிலையில் அதில் பாதி அளவில் தான் விற்பனை ஆவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பொரும்பாலான இடங்களில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். அவைகள் செடியிலேயே அழுகும் நிலையில் உள்ளது.

    விளைச்சல் உள்ள காலங்களில் தக்காளியை பாதுகாத்து பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்த முடியாததே இதற்கு காரணம். என அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: -

    3 மாதங்களுக்கு முன்னர் நடவு செய்து கடந்த ஒரு மாதமாக தக்காளி பறித்து புளியங்குடி மற்றும் கடையநல்லூர், பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் விற்று வருகிறோம்.

    ஒரு வாரமாக தக்காளி கொள்முதல் விலை சரிந்து வருகிறது. வாரச்சந்தையில் 12 கிலோ தக்காளி கூடை ரூ. 50 முதல் ரூ. 70-க்கு தான் வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். தக்காளி பயிரிட்டு 2 மாதங்களுக்கு பின்னர் காய் பறிக்கிறோம். 2 முறை உரம் போடுகிறோம். பூச்சி தாக்குதல் இருந்தால் மருந்து அடிக்கிறோம்.

    வாரம் 2 முறை தண்ணீர் பாய்ச்சி ஒரு முறை முழுமையாக களை எடுத்து, மண் அணைத்து தக்காளி பயிர் செய்கிறோம். மேலும் தக்காளியை பறிக்க கூலி, சந்தைக்கு கொண்டு செல்ல பயணக்கட்டணம் என அனைத்தும் சேர்த்து கிலோவுக்கு ரூ. 2 முதல் ரூ. 2.50 வரை செலவாகிறது.ஆனால் ஒரு கிலோ தற்போது ரூ. 4 முதல் ரூ. 5-க்கு விற்பளையாகிறது.இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    விளைந்த தக்காளியை பறிக்காமல் செடியில் அழுகும்படி விடவும் மனம் இல்லை. வரத்து நாள்தோறும் அதிகளவில் உள்ளதால் விலை ஏறும் என்ற உறுதியும் இல்லாததால் இருப்பு வைக்கவும் முடியாத நிலை உள்ளது.

    இத்தகைய நிலையை மாற்ற தக்காளி சீசன் காலத்தில் சேமித்து வைக்க குளிர்தன கிடங்கு எங்கள் பகுதியில் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து அரசு செலவில் கண்காணிக்கபட்டால் விவசாயத்தை நம்பிய எங்களை போன்ற விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் மாவட்டத்தில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×