search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured"

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தை சேர்ந்தவர் யங்கப்பா (50). இவரது மனைவி யல்லவ்வா (45). இவர்களுக்கு புந்தலிகா (22) என்ற மகனும், நாகவ்வா (20) என்ற மகளும் உள்ளனர். நாகவ்வாவுக்கு அசோக் (24) என்பவருடன் திருமணமாகி விட்டது. யங்கப்பாவிற்கு சொந்தமான வயல், ஹொன்யாலா கிராஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் வயலில் வேலை முடிந்ததும், வயலில் இருந்து யங்கப்பா உள்பட 5 பேரும் வெளியே வந்து சாலையோரம் நின்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.

    தகவல் அறிந்த பீலகி போலீசார் அங்கு சென்றனர். கவிழ்ந்த லாரி கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கிய 5 பேரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி ஓட்டுநர் காயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இருந்தார்.

    அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று அதிகாலை தளவாய்புரத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு விருதுநகர் வந்தனர். அங்கு பங்குனி பொங்கலையொட்டி திருவிழா நடந்து வரும் பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அதே சமயம் வழியில் உள்ள எஸ்.பி.நத்தம் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பின்னால் வைத்திருந்த பழக்கூடையுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த மணி, இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது.

    அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்புக் கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் காரில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தை ஆகியோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்தில் கார் சிக்கியதும் அதில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த கோர விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (வயது 55), காரில் பயணம் செய்த கனகவேல் (62), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி (58), கனகவேலின் மருமகள் நாகஜோதி (28), நாகஜோதியின் குழந்தை சிவா ஆத்மிகா (8) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டும், காருக்குள் சிக்கி உடல் நசுங்கியும் பலியானார்கள்.

    மேலும் காரில் இருந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவாஸ்ரீ ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளிக்குடி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இன்று மதியம் மற்றொரு குழந்தையான சிவாஸ்ரீயும் பலியானது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆனது.

    விபத்தில் பலியான குழந்தைகள் சிவாஆத்மிகாவும், சிவாஸ்ரீயும் இரட்டை குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மணிகண்டன் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார்.

    • காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த 24 மாணவிகள் தங்கி இங்குள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது.

    இன்று காலை பள்ளி சமையலர் அபிராமி குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது.

    இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி மற்றும் சமையலர் அபிராமி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் வாரச்சந்தையில் கூடி இருந்த வியாபாரிகள் உள்ளே வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவிகளை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவர் விடுதியில் இருந்த மற்ற மாணவிகளை பாதுகாப்பு கருதி வேறு ஒரு கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தார். பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு விட்டனர். இரவு நேரமாக இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது. பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகளும் வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் இது போன்ற அரசு விடுதியில் தங்கி இருந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தை பூட்டி விட்டு மாணவிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி:

    சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 34 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது விபத்தில் சிக்கியது.

    முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.

    இந்த விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த சந்திரன் மற்றும் பழனியம்மாள் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 12 பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன் விசாரணை நடத்தினர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்ற நிலையில் அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
    • விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆத்தூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

    கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அஜாஜ் நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது.

    இந்த வெடிகுண்டு சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.

    இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
    • விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    ×