search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infanticide"

    • ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது.
    • குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

    ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

    அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்சு லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

    லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்" என்றார்.

    லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

    ×