என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in fraud"

    • ராமநாதபுரத்தில் மோசடி அதிகரித்துள்ளதால் சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • இதுகுறித்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்.கார்டினை புதுப்பிக்க வேண்டும் என்று ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்து வந்த நிலையில் அதன்பின்னர் பரிசு விழுந்திருப்பதாக கூறியும், செல்போன் டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாக கூறியும், ஆன்லைனில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அதனை பெற முன்பணம் செலுத்துமாறு கூறியும், முகநூல் பதிவில் பண உதவி கேட்டும், ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி என பல்வேறு மோசடிகள் நாள்தோறும் நடந்து வருகிறது.

    இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றளவும் படிக்கா தவர்கள் மட்டு மல்லாது படித்தவர்களும் பேராசையின் மிகுதியால் ஏமாந்து கொண்டுதான் வருகின்றனர். இந்த மோசடி சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடியால் பலர் ஏமாந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துண்டு பிரசுரங்கள் வினி யோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதுகுறித்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் யாரும் பணம் மற்றும் வங்கி தொடர்பான எந்த குறுந்தகவல்களை கண்டு கொள்ளக்கூடாது. எந்த தகவலாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் வங்கிக்கே நேரடியாக சென்று விசாரித்து கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் மூலம் பணமோசடி செய்து யாரையும் ஏமாற்றினால் 24மணி நேரத்திற்குள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தினை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கினை முடக்கி யாரும் எடுக்காதவாறு கடும் நடவடிக்கை எடுத்து விடலாம்.

    அந்த பணத்தினை பல வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தாலும் அனைத்து வங்கி கணக்கினையும் முடக்கி விடலாம். இதன்பின்னர் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அந்த பணத்தினை திரும்ப பெற்றுவிடலாம். எனவே, இந்த 1930 என்ற எண் குறித்து மக்களிடம் தெளிவுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×