search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in 4 days in Erode"

    • ஈரோட்டில் 4 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    • பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே மாதம் 4-ந் தேதி குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்ட மானது ஈரோடு.

    பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மீண்டும் மெல்ல மெல்ல கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

    இதனால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ×