search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "golu toys"

    • நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.
    • ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

    தாராபுரம்,அக்.9-

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

    இந்தாண்டு நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பலரும் வீடுகளில் கொலு வைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். கொலு என்றால் அழகு என பொருள்.நவராத்திரியை முன்னிட்டு, பொம்மைகளை அழகுற வரிசையாக நிறுத்தி அவற்றுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது முறை.

    பழைய பொம்மைகளை சுத்தம் செய்து அவற்றை பயன்படுத்தினாலும், புதிதாக பொம்மைகளை வாங்கி வைக்கும் பழக்கமும் உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொம்மைகள் செய்யப்படுகின்றன. இந்தாண்டு, திரவுபதி வஸ்திரம், ஐஸ் வண்டி, பானிபூரி வியாபாரி, பலுான் வியாபாரி, பஞ்சுமிட்டாய் விற்பனை, ஜவ் மிட்டாய் இப்படி பல வகை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இது குறித்து கொலு பொம்மை வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.இந்தாண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வால் பொம்மைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் விற்பனை குறையவில்லை. சிறிய அளவிலான பொம்மைகளை களிமண்ணிலும், பெரிய பொம்மைகளை காகித கூழ் கொண்டும் செய்கிறோம். குறைந்தபட்சம் ரூ.60 முதல் அதிகபட்சம் ரூ.12 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் தசாவதாரம், கண்ணன், ஆர்மோனியம், தம்பூரா, திருமால் செட், வீடு, பொங்கல் செட் உள்ளிட்ட பொதுவான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும். இந்தாண்டு பூரி ஜெகன்நாதர், சாப்பாடு செட், கேரளா செண்டை மேளம், சபரிமலை செட், கடோத்கஜன், கும்பகர்ணன், அரசமர விநாயகர் செட், பீஷ்மர் அம்பு படுக்கை, கார்த்திகை பெண்கள், முத்தாலம்மன், புஷ்பக விமானம் உள்ளிட்ட பொம்மைகளை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதேபோல் ஐஸ் வண்டி, பஞ்சு மிட்டாய், ஜவ் மிட்டாய், பானிபூரி, சிவன், பார்வதி சொக்கட்டான் விளையாடும் பொம்மைகள் புதுவரவாக இருந்தன. அவை அதிகளவில் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக மகாபாரத கதையில் வரும் திரவுபதி வஸ்திரம் பொம்மைகள் அனைவராலும் விரும்பி வாங்கி செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர்
    • திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர். கடவுள்களின் சிலைகள், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், புராண கதைகளை கண்முன் கொண்டு வரும் பொம்மைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பறவை, விலங்கினங்கள் என பல வகை பொம்மைகளை அலங்கரித்து வைப்பர். தற்போது அவற்றோடு சேர்ந்து மத சகிப்புத்தன்மையை போற்றும் வகையில் மும்மத கடவுள்களின் சிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வனங்களின் தோற்றம், வளம் நிறைந்த எதிர்காலம் நம் தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நிறுத்தி பொம்மை அலங்காரங்களை வைக்கின்றனர். நவராத்திரி தொடங்க உள்ளதையடுத்து பொதுமக்கள் விதவிதமான பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்.

    அதற்கேற்ப பொம்மை தயாரிப்பாளர்களும், மக்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு பொம்மைகளை அழகழகாக தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    விநாயகர் கேரம் போர்டு விளையாடுவது, தசாவதார தோற்றம், ராமர் பாலம், சுப நிகழ்ச்சிகளில் கீழே அமர்ந்து உணவருந்துவது, காவிரியாறு உருவான வரலாறு, விஸ்வகர்மா உள்ளிட்ட பொம்மைகள் உள்ளன.

    நவராத்திரிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள போதும், கொலு அலங்காரத்துக்கு பெண்கள் பொம்மைகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

    ×