search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Godman Rampal"

    கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு இன்று மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #GodmanRampal #Rampallifesentence
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானா மாநில அரசில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.
     
    திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராக மாறினார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.

    ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் இவர் பேசியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து, ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகினர்.

    ஹிசார் மாவட்ட கோர்ட்டில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஹிசார் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.



    இந்நிலையில், மேலும் ஒரு கொலை வழக்கில் ராம்பால் உள்பட 13 பேருக்கு ஹிசார் கோர்ட் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இவரது ஆசிரமத்துக்குள் ஒரு பெண் பக்தர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் ராம்பால் மற்றும் 13 பேருக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் ராம்பால் உள்பட 14 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஹிசார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஆர்.சாலியா இன்று உத்தரவிட்டுள்ளார். #GodmanRampal #Rampallifesentence  
    ×