search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former MLA Ravi Arunan"

    • தமிழக அரசு புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது.
    • அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும்.

    கடையம்:

    முதல்-அமைச்சருக்கு, தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இருந்து குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் அந்த மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை அவர்கள் பயன்படுத்துவ தில்லை.

    இந்நிலையில் கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது. இதன் மூலம் கனிம வள கொள்ளை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது.

    கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பெரும்பா லான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாது காப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டது. இதனால் அம்மாநிலத்தில் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போலவே தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது. இந்த பகுதிகளை ஏன் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கூடாது? மேலும் கனிம வளங்கள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படு வதால் விவசாயமும் அடியோடு அழிவதுடன் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த கனிம வளங்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும். தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது.
    • கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கூறியுள்ளார்.

    கடையம்:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது. இதனை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் ஒருமித்த குரல் கொடுத்து வருங்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    கவன ஈர்ப்பு தீர்மானம்

    கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த கூட்ட தொடரிலேயே இதுபோன்று அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

    கனிமவள கொள்ளை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை தடை செய்ய அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பூஜ்யம் நேரம் என்று சொல்லக்கூடிய நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சபாநாயகரிடம் சிறப்பு அனுமதி வாங்கி பேசலாம்.

    தடை செய்ய கோரிக்கை

    கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை தொழில் துறையின் கீழ் வருவதால் அத்துறை மானிய கோரிக்கையின் போது இதுகுறித்து பேசி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். கனிமவள கடத்தலால் அரசுக்கு ஏற்படுகின்ற பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மானிய கோரிக்கையிலும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.

    அளவுக்கு மீறிய பாரத்தை கனரக வாகனங்களில் ஏற்றி சாலைகளில் செல்வதால் சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின்போதும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.

    இப்படி பல வழிகளில் முயற்சி செய்து கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். இதை மனதில் கொண்டு சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள். அதன் மூலம் நமது இயற்கை வளம் காக்கப்படட்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    ×