என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Footballer"

    • காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
    • காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    பிரேசில் நாட்டை சேர்ந்த உலக கால்பந்து ஜாம்பவான் பீலே. இந்நிலையில் 'பாலஸ்தீன கால்பந்தின் பீலே' என்று அழைக்கப்படும் சுலைமான் அல்-உபைத் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.

    பாலஸ்தீன தேசிய அணிக்காகவும், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அணிகளுக்காகவும் சுலைமான் விளையாடி உள்ளார்.

    தற்போது 41 வயதான சுலைமான் அல்-உபைத், கடந்த ஆகஸ்ட் 6 அன்று, காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

    1984 இல் பிறந்த சுலைமான் காசாவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவராக இருந்தார். 2007 முதல் 2023 வரை நீடித்த தனது கால்பந்து வாழ்க்கையில் பல்வேறு அணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார்.

    2010 மேற்கு ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஏமனுக்கு எதிராக அவர் அடித்த சிசர்-கட் கோல் குறிப்பிடத்தக்கது.

    சுலைமான் அல்-ஒபெய்டின் மரணத்துடன், காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    காசாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.

    விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், நடுவர்கள் மற்றும் கிளப் வாரிய உறுப்பினர்கள் உட்பட கால்பந்து தொடர்பானவர்களின் இறப்புகளின் எண்ணிக்கை 321 ஐ எட்டியுள்ளது. 

    • முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    பார்சிலோனா:

    பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்விஸ் (வயது 40). பார்சிலோனா அணியில் விளையாடி 3 சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரேசில் அணியில் விளையாடி 2 கோபா அமெரிக்கா கோப்பைகள் உள்பட 42 கோப்பைகளை அவர் வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின்போது, பிரேசிலுக்காக விளையாடிய வயது முதிர்ந்த வீரராக அறியப்பட்டவர்.

    இவருக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்தபோது, கழிவறையில் வைத்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

    கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசிலுக்காக விளையாடிய பின்னர் விடுமுறையை கழிக்க அவர் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது, இளம்பெண் மற்றும் அவருடைய நண்பருக்கு மதுபானம் வழங்கிய டேனி, பின்னர் வேறொரு இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.

    இதுபற்றிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.

    இந்த வழக்கின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    ஸ்பெயினில் குற்ற செயலை ஒப்பு கொண்டால் குறைந்த அளவிலான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அந்த இளம்பெண் முன்வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கடந்த நவம்பரில் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட டேனி, அதுமுதல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    • இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
    • கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

    மேற்கு ஜாவா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.

    அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.

    இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.

    அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.

    இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

    இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.

    ×