search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood in houses"

    திருப்பூரில் பலத்த மழை காரணமாக 200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பூர் நகரில் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் கிளை ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த கிளை ஆற்று வெள்ளம் திருப்பூர் - தாராபுரம் சாலையில் உள்ள தெற்கு தோட்டம், சங்கிலி பள்ளம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது.


    சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள், பனியன் குடோன், வேஸ்ட் குடோன்களிலும் வெள்ளம் புகுந்தது. வீடுகள், வீதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு மொட்டை மாடிகளிலும், மேடான பகுதிகளிலும் தஞ்சம் புகுந்தனர். விடிய, விடிய தூங்காமல் குளிரில் தவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 7.30 மணியளவில் திருப்பூர் - தாராபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் - தாராபுரம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    நொய்யல் ஆற்று வெள்ளம் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம்.

    ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மறியல் செய்தனர். அதிகாரிகள் வந்து வாக்குறுதி அளித்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினர்.

    இந்த மறியல் காரணமாக திருப்பூர் - தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வோர், அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், மாநகராட்சி உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கிளை ஆற்றில் அதிக தண்ணீர் வருவதை தடுத்து நொய்யல் ஆற்றில் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பணிகள் உடனே தொடங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை அடைத்து அதனை மாற்று வழி மூலம் நொய்யல் ஆற்றுக்கு திருப்பி விடும் பணி தொடங்கியது.

    மேலும் கொசு மருந்து அடிக்கும் பணி, பீளிச்சிங் பவுடர் தெளிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. #KarurRain
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டை பொறுத்தவரை சம்பா சாகுபடிக்கு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்து வருவதால் நெற்பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சம்பா சாகுபடியை பொறுத்தவரை நடவு பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நிலையில் இன்னும் சில பகுதியில் நாற்றங்கால் விட்டு வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் மணவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், மகிளிப்பட்டி, பிள்ளபாளையம் மற்றும் லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை செல்லும் சாலையின் இருபுறம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    இப்பகுதியில் பாதிக்குமேல் நடவு பணிகள் முடிந்துள்ளது. இன்னும் சில விவசாயிகள் நாற்று பறித்து வைத்துள்ளனர். கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு பகுதியில் இருந்து வந்த தண்ணீர் இப்பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. மேலும் பறித்து வைத்திருந்த நாற்று பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்துள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தகுந்தவாறு வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    அதே போல பிள்ளபாளையம் மங்கம்மாள் சாலை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கனமழைக்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    நெற்பயிர்களை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிவதற்குள் மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகி சேதமாக அதிக வாய்ப்புள்ளது.

    மேலும் லாலாப்பேட்டை சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வந்து செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். #KarurRain
    ×