என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Does the train run during the day?"

    • தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
    • சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    சேலம்:

    தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது தெற்கு ரெயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பான செயல்பாட்டில் சேலம் கோட்டம் முன்னிலையில் உள்ளது.

    சிறந்த சேவை

    குறிப்பாக பயணிகள் சேவை, சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து ஆகியவற்றில் சிறப்பான நிலையில் சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளது. ஆனால் கோட்டத்தின் தலைமையிடமாக சேலம் இருந்தும் இங்கிருந்து புதிதாக எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படாதது மக்களையும், ரெயில்வே ஆர்வலர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.

    மாநிலத் தலைநகராக இருக்கும் சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வராமல் உள்ள நிலையில் இது போல ரெயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன.

    அந்த கோரிக்கைகளுக்கு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், தொழில் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    பகல் நேர ரெயில்

    கோரிக்கைகள் குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது,

    சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டதும் மாவட்டத்தில் புதிய ரெயில் பாதைகள் அமைப்பு, புதிய ரெயில்கள் இயக்கம் என திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சேலம் வழியே செல்லும் பழைய ரெயில் வழித்தடங்கள் மட்டுமே இன்று வரை உள்ளது.

    ஆத்தூரில் இருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் ஆத்தூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் தற்போது வரை ஆய்வுக்கான அறிவிப்பு கூட இல்லாமல் உள்ளது.

    இதுபோல அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சியை இணைக்கும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி புதிய ரெயில் பாதை திட்டம் சுமார் 22 கிலோ மீட்டர் நீளம் மட்டுமே இருந்தாலும் கூட ரெயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பிய நிலையில் அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    இரட்டை வழித்தடம்

    சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டங்களை சேர்ந்த மக்களில் பல்லாயிரம் பேர் சென்னையில் பணியாற்றியும், கல்லூரிகளில் படித்தும் வருகின்றனர். ஆனால் அவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வருவதற்கு இடம் கிடைக்காமல் சுமார் 5 மணி நேரம் பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்கும் அவலம் நீடிக்கிறது.

    ரெயில்கள் தாமதம்

    தீபாவளி, பொங்கல் உள்பட எந்த ஒரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இதுவரை இயக்கப்பட்டதும் இல்லை. சேலம் மாவட்டத்தின் வழி யாக செல்லும் முக்கிய பாதையில் சேலம்-விருத்தாச்சலம் ரெயில் பாதை உள்ளது. இது போக்குவரத்து அதிகம் கொண்ட சேலம் மற்றும் விருத்தாச்சலம் ரெயில் நிலையங்களை இணைக்கும் பாதையாக உள்ளது.

    ஆனால் இந்த பாதை ஒற்றை வழித்தடமாக இருப்பதால் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம் அடிக்கடி தாமதமாகிறது. எனவே இதை இரட்டை வழித்த டமாக மாற்ற வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சேலம் ரெயில்வே கோட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே திட்டங்களை பெற்று தர சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவரும் ரெயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடுதல் ரெயில்கள்

    தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஹரிஹரன் பாபு கூறுகையில், தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக சேலம் உள்ளது. எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்கள், வடகிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ெரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய ரெயில்களை சேலத்தில் இருந்து இயக்குவதற்கு பிட்லைன் எனப்படும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், ரெயில் என்ஜினை ரெயில் பெட்டிகளில் மாற்றி இணைக்கும் வசதி ஆகியவை தேவை. இவை ஒரு ரெயில்வே கோட்டத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான தேவைகள்.

    சேலத்தில் பிட்லைன் அமைத்தால் இங்கேயே ரெயில் பெட்டிகளை பராமரிக்க வசதி கிடைக்கும். இதன் மூலம் சேலத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் ரெயில்களை இயக்க முடியும். சேலத்தில் பிட் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பகல் முழுவதும் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில் பராமரிப்பு செய்து சேலம்-கோவை அல்லது சேலம்-திருச்சி என குறுகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்பு ஏற்படும்.

    2-வது ரெயில் முனையம்

    இதேபோல அயோத்தியாப் பட்டணத்தை சேலத்தின் 2-வது ரெயில் முனையமாக ஏற்படுத்தினால் சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில், சேலம்-கோவை பயணிகள் ரெயில், சேலம்-காட்பாடி பயணிகள் ரெயில் ஆகியவற்றை அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து இயக்கும்போது சேலம் டவுன், சேலம் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையத்துக்கு உட்பட்டவர்களுக்கு நேரடி ரெயில் வசதி கிடைக்கும். இதற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள பொன்னம்மாப் பேட்டையில் செயல்பட்டு வந்த சேலம் கிழக்கு ரெயில் நிலையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×