search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disadvantaged"

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளன.
    சென்னை:

    கல்வி தரத்தில் நெல்லை மாவட்டம் எப்போதும் முன்னணியில் இருக்கும். ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என இதை பெருமையுடன் அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது பின்னோக்கி சென்றுள்ளது.

    பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டம் 10-வது இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 37,702 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 16,241 பேர் மாணவர்கள், 21,461 பேர் மாணவிகள்.

    312 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியவர்களில் 35,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டம் 96,08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவு. இதனால் இம்மாவட்டம் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய 312 பள்ளிகளில் 119 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை 7-வது இடத்துக்கு பின்நோக்கி சென்று விட்டது.

    இந்த மாவட்டத்தை சேர்ந்த 20,923 பேர் (8,510 மாணவர்கள், 11,475 மாணவிகள்) தேர்வு எழுதினர். அவர்களில் 95.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். அதாவது கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் 96.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

    கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரிக்கு உண்டு. ஆனால், நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் 95.08 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் இம்மாவட்டம் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



    கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,398 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 10,260 பேர் 58 அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அதில் 4 ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் மலைவாழ் நல பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளும் அடங்குவர்.

    பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

    ×