search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees dead"

    விழுப்புரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் புதுவை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே தாயுமானவர் தெரு உள்ளது. இந்த தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் மின்கம்பம் பழுதாகி நின்றது.

    இந்த மின் கம்பம் உள்ள இடத்தில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இந்த கோவிலையொட்டி சிறிய விநாயகர் கோவிலும், வள்ளலார் மடமும் உள்ளது. இந்த மடத்துக்கு வள்ளலார் பக்தர்கள் இரவு நேரம் தங்குவார்கள். அதன்படி விழுப்புரம் கல்லூரி நகரை சேர்ந்த மணி (வயது 55), கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் சிலர் அங்கு தூங்கினர்.

    இன்று காலை திடீரென மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் மணி, ராமலிங்கம் ஆகியோர் இடிபாடுக்குள் சிக்கினர். அவர்கள் உயிருக்கு போராடினார்கள். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு ஆரோக்கியதாஸ், போலீஸ்காரர் கலைக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ராமலிங்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    திருச்சி அருகே கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம் பாளையம் கிராமத்தில் வண்டித்துரை கருப்புச்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மண்ணச்சநல்லூரை சேர்ந்த தனபால் (வயது 55) நடத்தி வந்தார்.

    இந்த கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அப்போது பிடிக்காசு வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் மாவட்டம் நன்னியூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (60), கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராஜவேல் (55), பின்னாத்தூர் பூங்காவனம் (50), சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரம் காந்தாயி (38), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கோனாட்சி மரம் சாந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புள்ளான்குளம் ராமர் (50), விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி வள்ளி (35) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.

    12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு திருச்சி கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து துறையூர் போலீசார் கோவில் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் சிவராசு கூறுகையில், கோவிலில் பிடிகாசு தீரப்போவதாக பக்தர்களிடம் திடீரென வதந்தி பரவி உள்ளது. அதை நம்பி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சிலர் முண்டியடித்து உள்ளே செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் கோவிலாக இருந்தாலும் விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார்.

    கைதான பூசாரி தனபால் அடிப்படையில் டெய்லர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணச்சநல்லூர் பகுதியிலும், துறையூர் நகரின் ஒரு பகுதியிலும் இதே போல் கருப்புசாமி கோவில் நடத்தி வந்துள்ளார். கோவில் நடத்திய இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தையம்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை நடத்தி வந்துள்ளார்.

    நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    கைதான பூசாரி தனபால்
    ×