search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crackdown"

    கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.5 கோடிவரை பரிசு வழங்குகிறது. #BlackMoney #Crackdown #Modi
    புதுடெல்லி:

    வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஜூன் 1-ந் தேதி, ரூ.5 கோடிவரை உயர்த்தியது.



    அதுபோல், பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடிவரை பரிசு வழங்கப்படும்.

    அதற்காக ஒருவரே 2 திட்டங்களின் கீழ், மொத்தம் ரூ.6 கோடி பெற்றுவிட முடியாது. அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு மேல் கிடைக்காது.

    இந்த பரிசுத்தொகையை பெற உரிய ஆவணங்களுடன் திட்டவட்டமான தகவல்களை அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர், தனிநபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்கலாம். ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான வரி ஏய்ப்பு பற்றி துல்லியமான தகவல்களை அளிக்க வேண்டும்.

    இத்தகைய வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க வருமான வரி (புலனாய்வு) தலைமை இயக்குனரை அணுக வேண்டும். அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும்.

    ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அசையும் அல்லது அசையா பினாமி சொத்துகள் பற்றியும் தகவல் அளிக்கலாம். பினாமி சொத்து பற்றி தகவல் அளிப்போர், வருமான வரி இணை ஆணையரை அணுக வேண்டும்.

    தகவல் அளிப்பவர்கள், தங்களது தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் கருப்பு பண விவரம், கருப்பு பண பேர்வழிகள் விவரம், சொத்துகளின் முகவரி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட வேண்டும்.

    அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் சொத்துகளின் மதிப்பு அடிப்படையில், வெவ்வேறு அடுக்கு கொண்ட பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் நிர்ணயித்துள்ளது. இடைக்கால பரிசு, இறுதி பரிசு என 2 கட்டங்களாக பரிசு வழங்கப்படும்.

    1. கருப்பு பண சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்து பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.50 லட்சம்வரை வழங்கப்படும். இறுதி பரிசாக ரூ.5 கோடிவரை வழங்கப்படும். இருப்பினும், இறுதி பரிசுத்தொகைக்கு 10 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    2. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வருமானம் அல்லது சொத்துகள் பற்றி தகவல் தெரிவித்தால், இடைக்கால பரிசாக ரூ.5 லட்சம்வரையும், இறுதி பரிசாக ரூ.50 லட்சம்வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    3. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடிக்கு மேற்பட்ட ரொக்கம் பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.15 லட்சம் வரையும், இறுதி பரிசாக ரூ.1 கோடி வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    தகவல்களை மதிப்பீடு செய்த 4 மாதங்களுக்குள் இடைக்கால பரிசுத்தொகையும், பினாமி சொத்துகளை பறிமுதல் செய்த 6 மாதங்களுக்குள் இறுதி பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

    அதே சமயத்தில், தவறான தகவல் அளிப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  #BlackMoney #Crackdown  #tamilnews 
    வங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Bangladeshdrugs
    டாக்கா:

    வங்கதேசத்தில் போதை மருந்து புழக்கம் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக யாபா எனப்படும் போதை மாத்திரைகள் வங்கதேசத்திற்குள் கடத்தி வரப்படுவதால் அந்த கும்பலை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    இந்த நடவடிக்கையின்போது போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்படுகிறது. இதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு இடையிலும் மோதல் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இன்று மட்டும் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 10 நாட்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த கொலைகளை அரசுத் தரப்பு நியாயப்படுத்தி உள்ளது. ஆனால், கொல்லப்பட்டவர்களில் பலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்த்து கட்டப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. 

    அண்டை நாடுகளான மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 40 மில்லியன் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews #Bangladeshdrugs
    ×