என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut Milk rice"

    • தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது.
    • பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும்.

    நம் பாரம்பரிய உணவுகளில் புளியோதரை, லெமன்சாதம், தயிர்சாதம் போலவே தேங்காய் சாதமும் முக்கிய இடம் பிடிக்கிறது. உணவுக்கு சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் தேங்காய் சாதம் செய்து அசத்த முடியும். இதனால் சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

    குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நாம் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகள் செய்து கொடுக்கும் பொழுது அதில் சுவை மட்டுமே அதிகமாக இருக்குமே தவிர குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும்.

    ஆனால் குழந்தைகள் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் பொழுது, அதனை எப்படி ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு ஹெல்தியான ரெசிபி தான் இந்த தேங்காய் பால் சாதம்.

    தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. அதனுடன் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்ந்து கொடுக்கும்பொழுது ஆரோக்கியமான மதிய உணவு அல்லது காலை உணவாக இந்த தேங்காய் பால் சாதம் இருக்கும்.

    தேங்காய் பால் சாதத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் வைட்டமின் சி, போலேட், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    தேங்காய் பாலில் எம்.சி.டி. எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பானது உடனடியாக கரைந்து உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்க வல்லது. குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியமாகும்.

    பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும். பசும்பாலில் உள்ள சத்துக்களை போலவே இதிலும் சத்துக்கள் அதிகம் என்பதால் பசும்பாலுக்கு பதிலாக இதனை குழந்தைகள் எடுத்துக் கொள்ளலாம்.

    இதில் இயற்கையிலேயே நிறைந்திருக்கும் லாரிக் அமிலம் எனப்படும் அமிலம் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். எனவே உடலில் ஏற்படும் காயங்களை இயற்கையாகவே ஆற்றும் தன்மை தேங்காய் பாலுக்கு உண்டு.

    மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.

    இயற்கையிலேயே காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸி டென்ட்களான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை உடலில் செல்கள் சிதை உடையாமல் பாதுகாக்கின்றன.

    தேங்காய் பாலில் நீர் சத்துக்கள் அதிகம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.

    உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    தேங்காய் - அரை மூடி
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
    பட்டை - 3,
    லவங்கம் - 5,
    ஏலக்காய் - 3,
    பிரியாணி இலை - 2,
    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
    முந்திரி - 50 கிராம்,
    நெய் - 100 கிராம்,
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×