search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clarifies"

    ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷியா நடத்திய கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்றாலும், தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #India #Taliban #FederalGovernment
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து 18 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் தலீபான்கள் ஆதிக்கத்தின்கீழ்தான் உள்ளன. அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்த நாட்டின் மறுசீரமைப்பு பணிகள் பாதித்து உள்ளன. இந்தநிலையில் மாஸ்கோவில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷியா வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் இதில் பங்கேற்க மறுத்து விட்டன.

    இருப்பினும் மாஸ்கோவில் இந்த கூட்டம் நேற்று நடந்தது. ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் உயர் அமைதி கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டது. இந்தியாவின் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் அமர்சின்காவும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவனும் கலந்து கொண்டனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த கூட்டத்தில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் பேசும்போது, “ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதில், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என கூறினார்.

    ரஷிய கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு தொடர்பாக மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ரஷிய கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் கலந்து கொள்வது என்பது மத்திய அரசு எடுத்த முடிவு ஆகும். இந்த அளவில் பங்கேற்பதற்கு எதற்காக முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விளக்கத்திற்குள் நான் உண்மையிலேயே செல்ல முடியாது.

    தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நாங்கள் எங்கே கூறினோம்? நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. ரஷியா நடத்துகிற ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று மட்டுமே சொன்னோம். அதிகாரபூர்வமற்ற முறையில் அதில் கலந்து கொள்வது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றுதான் சொன்னோம்.

    ஒரு முடிவு எடுப்பதில் நிறைய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த முறை, அந்த கூட்டத்தில் நாம் பங்கேற்பது என்பது மத்திய அரசு பரிசீலித்து எடுத்த முடிவு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×