search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child killer"

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷ்குமார். இவரது மனைவி அனுசியா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், அனுசியாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் எனவும், அதை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அனுசியாவின் கர்ப்பபையை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அனுசியாவிற்கு ரத்தமும் கொடுத்தனர். இந்நிலையில் அனுசியாவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனுசியாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×