search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai rajarathinam stadium"

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்துள்ளது. #TeacherProtest
    சென்னை:

    அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னதாக பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருந்து வருவதே இந்த போராட்டத்திற்கு காரணம்.

    ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந்தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியைகள், கைக் குழந்தைகள் மற்றும் தங்கள் கணவர்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    கொட்டும் பனியையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 5-வது நாளாக இரவு- பகலாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் பலர் உடல் நிலையில் சோர்வுற்றனர். ஆரம்பத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து வந்ததால் 100-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.


    இப்போது தண்ணீர் மட்டும் குடித்து கொண்டே உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் சம்பவ இடத்தில் போலீசாரும், மருத்துவ குழுவினரும் குவிக்கப்பட்டனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சோர்வுற்று மயங்கினர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். நேற்று இரவு வரை 180 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலும் ‘ட்ரிப்ஸ்’ ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் 5 பேர் இன்று காலையில் மயக்கம் அடைந்தனர். அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் சதாசிவம், ஆசிரியைகள் தமிழ்செல்வி, பூமணி, கிருஷ்ணவேணி, முத்துமாரி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து அங்கேயே குளுக்கோஸ் ஏற்றினர். போராட்ட களத்தில் முதல் உதவி அளிக்கும் வகையில் குளுக்கோஸ் ஏற்றவும் அதனை தொங்கவிடவும் தேவையான இரும்பு ஸ்டேண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாக்கெட்டினை சக ஆசிரியர்கள் கையில் பிடித்து கொண்டனர். ஒரு சிலரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் குழு அறிவுறுத்தியதால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

    கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்து விட்டு அவர்கள் பட்டினியாய் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    கொசுக்கடியிலும், குளிரிலும் குழந்தைளுடன் உண்ணாவிரதத்தில் இருந்து வரும் ஆசிரியைகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. பந்தலோ, பாயோ எதுவும் இல்லாமல் தரையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.


    போராட்டத்தில் அதிகளவு பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அளவு கழிவறை வசதி கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கூறியதாவது:-

    ஒரே தகுதியுடைய ஒரே வேலை செய்யக் கூடிய ஆசிரியர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம் வழங்குவதை எதிர்த்துதான் போராடுகிறோம். இந்த ஊதிய வித்தியாசம் ரூ.15 ஆயிரம்வரை உள்ளது. சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில்தான் போராடுகிறோம்.

    நியாயமான எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

    கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். பள்ளி விடுமுறை முடிந்தாலும் கூட போராட்டம் தொடரும் என்றார்.

    இதற்கிடையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் அரசு வழங்குவதால் அதனை சித்தரிக்கும் வகையில் டி.பி.ஐ, வளாகத்தில் துப்புரவு பணியினை மேற்கொண்டனர். #Teachersprotest
    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்துள்ளது. #TeacherProtest
    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

    முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீசார் வேனில் ஏற்றி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

    விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதன் பிறகு பிற்பகலில் அரசு அதிகாரிகள் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் 4-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதில் 123 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக டி.பி.ஐ. வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்காக தயார் நிலையில் ஆம் புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #Teachersprotest
    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 36 பேர் மயக்கமடைந்தனர். #TeacherProtest
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.



    அங்கு அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். நேற்று 30 ஆசிரியர்கள் அடுத்தத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    நேற்று இரவு முதல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் இன்று மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தனர். மொத்தம் 36 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவார்கள்.

    தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #TeacherProtest
    ×