search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation School"

    • சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
    • 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

    மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.

    இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.

    இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.

    உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.

    சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது.
    • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் ஏற்கெனவே 281 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 139 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் தற்போது 420 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பள்ளிகளில் தற்போது 1.35 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கல்வித்துறை அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஸ்மார்ட்சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம் ஆகியவற்றின் மூலமாக பல பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின்போது 85 சதவீதத்துக்கு மேல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளது. மாணவர்கள் நன்றாக படிப்பதற்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் வசதிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பள்ளிகளின் நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்குமாறு கூறியுள்ளோம்.

    முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு வைத்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×