search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canal Repair work"

    • பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது
    • 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்கால் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் கரைகள் பழமை காரணமாக ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக அமைக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    இந்நிலையில் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நேற்று முன்தினம் மாலையில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது.

    இந்த தண்ணீர் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீர் ஓடை வழியாக இடது புறக்கரைக்கு சென்றதால் அங்கும் உடைப்பு ஏற்பட்டது.

    வாய்க்காலில் 1300 கன அடி நீர் சென்று கொண்டிருந்ததால் உடைந்த இரு கரைகளில் இருந்தும் வெளியேறிய தண்ணீர் வெள்ளத்தைப் போல விளை நிலங்கள் வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பாலப் பாளையம், சின்னியம் பாளையம், கூர பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், வாழை, கரும்பு , தென்னை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் இந்த ஊர்களில் செல்லும் தார் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் விலை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் வடிய தொடங்கி உள்ளது. நேற்று கரை உடைப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி இன்னும் 10 நாட்களுக்குள் வாய்க்கால் கரை உடைப்பு சீரமைக்கப்படும் என்றார்.

    இந்நிலையில் இன்று முதல் வாய்க்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணி துறையினர் அங்கு முகாமிட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் நேற்று இரவுவே வரவழைக்கப்பட்டு உள்ளன.  

    ×